கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அம்மாநிலத்தில் முதலமைச்சர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில்  ஆட்சியை தக்கவைக்க மமதா பானர்ஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே, அமைச்சராகவும், மமதாவுக்கு மிக நெருக்கமானவராகவும் இருந்த சுவேந்து அதிகாரி, டிசம்பர் 17ம் தேதி எம்எல்ஏ, அமைச்சர் பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து, கட்சியின் பல எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைந்தனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா கடந்த 5ம் தேதி பதவியை திடீரென ராஜினாமா செய்து, மமதாவுக்கு அதிர்ச்சி அளித்தார். சில நாட்கள் முன்னதாக சாந்திபூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ அரிந்தம் பட்டாச்சார்யா பாஜகவில் இணைந்தார்.

இந் நிலையில், மேற்கு வங்க வனத்துறை அமைச்சர் ராஜிப் பானர்ஜி தமது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அம்மாநில ஆளுநருக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: மேற்கு வங்க மக்களுக்கு சேவை செய்வது ஒரு பெரிய மரியாதை மற்றும் பாக்கியம் ஆகும். இந்த வாய்ப்பை பெற்றமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.