With this loss, the door is fast closing for Bangalore

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணியிடம் பெங்களூர் அணி தோல்வியடைந்தது. நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி 5ஆவது முறையாக அடையும் தோல்வி இது.

 

பெங்களூரில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர், குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ரெய்னா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. கேப்டன் கோலி 10 ரன்னில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் (8 ரன்), ஹெட் (0) இருவரும் ஆண்ட்ரூ டையின் ஒரே ஓவரில் காலியானார்கள். கேதர் ஜாதவ், 31 ரன் எடுத்தார். நின்று ஆடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட டிவில்லியர்ஸ் 5 ரன்னில், ரன்-அவுட் ஆக பெங்களூரு அணி சுருண்டது. பவன் நேகி மட்டும் தாக்குப்பிடித்து ஆடி 32 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 134 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. குஜராத் தரப்பில் ஆண்ட்ரூ டை 4 ஓவர்களில் 12 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

 

பின்னர் ஆடிய குஜராத் அணி 13.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் இஷான் கிஷன் 16 ரன், மெக்கல்லம் 3 ரன்களில் வெளியேறினாலும் ஆரோன் பிஞ்சும், கேப்டன் சுரேஷ் ரெய்னாவும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பிஞ்ச் 72 ரன்கள் (34 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) சுரேஷ் ரெய்னா 34 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். குஜராத் வீரர் ஆண்ட்ரூ டை ஆட்டநாயகன் விருது பெற்றார்.

 

8-வது ஆட்டத்தில் ஆடிய குஜராத் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். 9 ஆட்டங்களில் ஆடியுள்ள பெங்களூர் அணிக்கு இது 5வது தோல்வி.