டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர்-7ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  டிசம்பர் 7-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும் என்று  நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்து உள்ளர்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், நடப்பு ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ம் தேதி தொடங்கி டிசம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறும். அதன்படி, மொத்தம் 17 வேலை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும். அமர்வின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆக்கபூர்வமான விவாதங்களை எதிர்நோக்குகிறோம் என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் டிசம்பர் முதல்வாரத்தில் நடைபெற்று டிசம்பர் 8ந்தேதி குஜராத், இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட உள்ளன நிலையில், இந்த நிலையில் டிசம்பர் 7ந்தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தல், தேர்தல் வெற்றி தோல்வி எதிரொலிக்கும் என்பது மட்டுமின்றி, பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பல்வேறு விவகாரங்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருமாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளைத் பொறுத்தே விவாதங்களின் போக்கு மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த  கூட்டத்தொடரின் முதல் நாளில் சமாஜவாதி கட்சியின் நிறுவனரும், மக்களவை எம்.பி.யுமான முலாயம் சிங் யாதவ் மற்றும் மூத்த அரசியல் தலைவர்களின் மறைவுக்கு உறுப்பினர்கள் இரங்கல் தெரிவிப்பார்கள். அதைத்தொடர்ந்து, துணை குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெகதீப் தன்கர், முதன்முறையாக மாநிலங்களவைத் தலைவராக கூட்டத்தை வழிநடத்தப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.