சென்னை: அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில், சிஎஸ்கே வீரர்களுக்கு, சென்னையில் பயிற்சி முகாம் நடத்துவதற்கு அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளதாவது, “சென்னையில் ஆகஸ்ட் 16 முதல் 20ம் தேதிவரை பயிற்சி முகாம் நடத்த விரும்புகிறோம். தமிழக அரசிடம் ஒப்புதல் கேட்கப்பட்டபோது, அதற்கு நேர்மறையான பதில் கிடைத்தது.

ஆனால், எழுத்துப்பூர்வ அனுமதியைக் கேட்டுள்ளோம். அதனைப் பெற்றபிறகு, வீரர்களுக்கு தனியாக பயிற்சி முகாம் நடத்தவுள்ளோம். வீரர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு களமிறங்குவதால், இந்த விஷயத்தில் அவசரம் காட்டப்போவதில்லை.

திறமையின் அடிப்படையில் பயிற்சிகள் அமையும். சென்னை அணியைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. அதை தோனி பார்த்துக்கொள்வார்” என்றார் அவர்.