விசாகப்பட்டினம்:

பாஜகவை சார்ந்துள்ள அமைப்புகள் மோடியையும், அமீத்ஷாவையும் ஆதரிக்கக் கூடாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார்.


ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பேரணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசும்போது, மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது. 543 மக்களவை தொகுதிகளில் அவர்களால் 125 தொகுதிகளை தாண்டி வெற்றி பெறமுடியாது.

பாஜகவின் சார்பு அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். நீங்கள் இந்த நாட்டை நேசிப்பவராக இருந்தால்,மோடியையும், அமீத்ஷாவையும் ஆதரிக்காதீர்கள்.

இந்த தேர்தலில் சிறப்பம்சம் உண்டு. உத்திரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் தனித்து நின்றதால், கடந்த முறை அங்கு பாஜக வெற்றி பெற்றது.

இம்முறை இருவரும் கைகோர்த்துள்ளனர். எனவே பாஜக அங்கு கடந்த முறையைப் போல் வெல்ல முடியாது. ஒடிஷாவிலும் இதே நிலைதான் என்றார்.