ராய்பூர்: அதானி விவகாரத்தில் உண்மைகள் வெளிவரும் வரை கேள்விகள் எழுப்புவோம், ஓய்ந்துவிட மாட்டோம் என்று ராய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  அதானியின் நிறுவனங்கள் நாட்டை காயப்படுத்துகின்றது, நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் பறித்துக்கொண்டிருக்கின்றது எனவும் கடுமையாக சாடினார்.

சத்தீஸ்கர் மாநிலம்  ராய்பூரில் 3 நாட்கள் காங்கிரஸ் கட்சியின் 85வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 2024 சட்டமன்ற தேர்தல் உள்பட பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை – 26ந்தேதி) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட சோனியாகாந்தி, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 85வது பொதுக்குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடினார்.

அதானி சொத்துக்களை குவிப்பதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் எதிராக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டிய ராகுல்,  உண்மை வெளிவரும் வரை  கவுதம்அதானி குறித்து தனது கட்சி தொடர்ந்து கேள்விகளை எழுப்பும் என்றும்,  “அதானிக்கும் பிரதமருக்கும் உள்ள தொடர்பு குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் கேட்டபோது, ​​எங்களின் முழுப் பேச்சும் நீக்கப்பட்டது. அதானி குறித்து உண்மை வெளிவரும் வரை ஆயிரக்கணக்கான முறை நாடாளுமன்றத்தில் கேட்போம், நாங்கள் நிறுத்த மாட்டோம்,” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “அதானியின் நிறுவனம் நாட்டை ‘பாதிக்கிறது’ மற்றும் ‘நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பையும் பறிக்கிறது’ என்று நான் சொல்ல விரும்புகிறேன். நாட்டின் சுதந்திரத்திற்கான போர் ஒரு நிறுவனத்திற்கு எதிராக இருந்தது, ஏனெனில் அது அனைத்து செல்வம் மற்றும் துறைமுகங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டது. வரலாறு மீண்டும் மீண்டும் வருகிறது. இது நாட்டிற்கு எதிரான வேலை, அப்படி நடந்தால் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் இதற்கு எதிராக நிற்கும்.

பங்கு விலை கையாளுதல் மற்றும் மோசடி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக அதானி குழுமத்திற்கு எதிரான அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழுவை உறுப்பினர்கள் கோரியதன் விளைவாக, அதானி மீதான சர்ச்சை நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்தி, சபை நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்தியதாவர்,  சீனப் பொருளாதாரத்தின் அளவு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் சமீபத்திய கருத்துக்கள் “கோழைத்தனம்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

நாடு ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டபோது இந்தியாவின் பொருளாதாரம் பெரிதாக இருந்ததா என்று அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பிய ராகுல்,  “இது தேசியவாதம் அல்ல, கோழைத்தனம். உங்களை விட வலிமையானவர் முன் தலைவணங்குவது சாவர்க்கரின் சித்தாந்தம். சீனாவின் பொருளாதாரம் நமது பொருளாதாரத்தை விட அதிகமாக இருப்பதால், அவர்களுடன் நம்மால் போராட முடியாது என்று அமைச்சர் கூறுகிறார். இதுதான் தேசியவாதமா? இது கோழைத்தனம்’’ என்று சாடினார்.

பாரத் ஜோடோ யாத்ரா மூலம் மேற்கொள்ளப்படும் “எளிமையை” முன்னெடுத்துச் செல்ல புதிய திட்டத்தை கட்சி வகுக்க வேண்டும் என்றும், முழு நாடுடன் நானும் அதில் பங்கேற்பேன் என்றும் ராகுல்காந்தி கூறினார்.