டெல்லி : காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் பாசனத் தேவைக்காக ஆண்டுதோறும் 177 புள்ளி 2 டி.எம்.சி காவிரி நீரை வழங்க வேண்டும் என, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாதந்தோறும் தமிழகத்திக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு ஜூன் மாதம் 9. 19 டி.எம்.சி.யும் ஜூலை மாதம் 31. 24 டி.எம்.சி. யும் காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என, சமீபத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில்,  காவிரி நீர் பங்கீடு குறித்து விவாதிக்க, டெல்லியில் 12வது காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் இன்று கூடியது. காணொளி காட்சி மூலம் இன்றைய  காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கி  நடைபெற்று வருகிறது

மத்திய நீர்வள ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில்   காணொலி வாயிலாக நடைபெற்று வரும் கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழிற்நுட்பப்பிரிவு தலைவர் சுப்ரமணியன் பங்கேற்றுள்ளனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீர் குறித்தும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம்-கர்நாடகா இடையே நீடிக்கும் பிரச்சனை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழகம் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு  தெரிவிக்கப்பட்டது. மேகதாது அணை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அணை கட்டுவது தொடர்பான எந்த ஆரம்பக்கட்ட பணியும் மேற்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, இரு மாநில அணைகளிலும் உள்ள நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்து, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.