ஏன் கொண்டாட வேண்டும் இளையராஜாவை – தொடர் – அத்தியாயம்-6 – நியோகி

இசை என்பது ஒரு மகா சமுத்திரம் .

இளையராஜா…?

அந்த சமுத்திரப் பரப்பெங்கும், மாலை நேரத்து மாருதங்களோடு, முதுகில் நம்மை சுமந்து செல்லும், வெள்ளுடை தரித்த டால்ஃபின் !!

கடந்த நான்கு தசாப்தங்களாக… ஆர்த்து எழும் அந்த சப்தஸ்வர அலைகளின் மீது எவ்வளவு லாவகமாக நம்மை ஏற்றி இறக்கி அழைத்துச் செல்கிறார் என்பதை முழுமையாக அறியாமலேயே அவர் மீது நாம் சுகசவாரி செய்து கொண்டிருக்கிறோம் !

அவருடைய அந்த லாவகம் மட்டும் இல்லையென்றால் இசை நமக்கு இவ்வளவு இனித்திருக்காது …?

ஒரு சுகமான இசையை காதுகளில் கொண்டு வந்து சேர்ப்பதற்கு ட்யூன் என்பது மட்டும் போதாது. அது ஒரு ஆரம்ப கட்டம் மட்டுமே ! மேலும், அது பல படி நிலைகளைக் கடந்துதான் சுகந்தம் என்னும் அந்தஸ்த்தைப் பெறுகிறது.

இதைக் கொஞ்சம் எளிமையாக்கி விளங்கிக் கொள்ளப் பார்ப்போம்.

1. மெலோடி

ஒரு பாடல் என்பது ஒரு குறிப்பிட்ட ராகத்தை முதன்மைப் படுத்திக் கொண்டு அமைகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த குறிப்பிட்ட ராகம் என்பது ஒரு மெயின் ரோடு போல ! ஒரு மெயின் ரோட்டை அடைய நாம் பற்பல குறுக்கு வீதிகள் மூலமாக பயணம் செய்வோம் அல்லவா..?

அந்த குறுக்கு வீதிகள் தான் மெட்டுக்கள்.

அதாவது, ஒரு ராகத்தின் ஸ்வரங்களை வைத்துக் கொண்டு பலவிதமான Permutation and Combination செய்வது. எந்த வீதியின் வழியாக சென்றால் பயணம் சுகமாக இருக்கும் என்று கணிப்பது. அப்படி,கணிக்கும் போது… அந்த கணிப்பு சரியாக இருக்குமானால் அந்தப் பாடல் ஹிட்.

2. ஸ்ருதி :

அதாவது ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு ஸ்ருதியை ஃபிக்ஸ் செய்வார்கள். அதை பிட்ச் என்பார்கள். உதாரணத்துக்கு, ஷ்யாம் – கல்யாண் ராகத்தில் அமைந்த இளையராஜாவின் காலத்தை வெல்லும் பாடலான “நீ ஒரு காதல் சங்கீதம்…” என்னும் பாடல் 1 ஸ்ருதில் அமைக்கப்பட்டது. அதையே 3 ஸ்ருதியில் அல்லது 6 ஸ்ருதியில்  பாடினால் இனிக்காது. ஆக ஒவ்வொரு ட்யூனையும் எந்த ஸ்ருதியில் கொடுக்க வேண்டும் என்ற முடிவு மிக முக்கியம் !

3. தாளம்:

ஒரு பாடலின் டெம்ப்போவை மிக்ச் சரியாக ஃபிக்ஸ் செய்ய வேண்டும். அந்த குறிப்பிட்ட பாடல், அந்த குறிப்பிட்ட மூடுக்கு, எவ்வளவு வேகத்தில் பாடப்பட்டால் இனிமையானதாக இருக்கும் என்று கணிக்க வேண்டும்.

4. குரல் :

இந்த ட்யூனை இந்த குரல் பாடினால் உசிதம் என்று தெளிவாக முடிவு செய்ய வேண்டும். இதில், வியாபார நிமித்தமான சில நிர்பந்தங்களும் வரும். அதை தவிர்க்க இயலாது. ஆக, அந்த குரலுக்கேற்றாற் போல ட்யூனை வரையறுத்துக் கொள்ள வேண்டும் !

5. இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் :

இந்த இந்த வாத்தியக் கருவிகளை இந்தபாடலில் இசைத்தால் அது இனிமையாகவும், புதுமை யாகவும், காதுகளுக்கு சுகமாகவும் இருக்கும் என்னும் யுக்தி முக்கியம். உதாரணத்துக்கு, தேவர் மகனில் வரும் அஃமார்க் நாட்டுப்புறப் பாடலான  “போற்றிப் பாடடி பொண்ணே…” என்னும் பாடலில், இந்துஸ்த்தானி இசைக் கருவியான “ஷெனாய்” வாத்தியத்தை இசைத்திருப்பார். அந்தப் பாடலின் ஸ்ருதியில், அந்த குறிப்பிட்ட ஆக்டேவில், அது இந்துஸ்த்தானி வாத்தியமாக அல்லாமல் ஏதோ நம் கிராமத்து வாத்தியம் போல சவுண்ட் செய்யும். அந்த நூதனக் கலவைதான் வெற்றிக்கு முக்கியம். அதில் கரைகண்டவர் இளையராஜா.

6. ஹார்மனி :

கோரஸ் எனப்படும் குழுக்குரல்கள் இளையராஜாவின் பாடல்களில் ஸ்பெஷல் அம்சமாகும். அவரது பாடல்களில் கோரஸ் என்பது எதிர்பாராதபடி உள்ளே புகுந்து வரும். மேலும், புதுவிதமான “டிக்க்ஷனை” அதற்குக் கொடுத்திருப்பார். உதாரணத்துக்கு, புதிய வார்ப்புகள் படத்தில் அமைந்த “நம்தன… நம்தன தாளம் வரும்…” பாடலில் இதை பரிபூரணமாக உணரலாம். ஒரு தரமான ஸ்டீரியோ ஹெட் செட்டில் இந்தப்பாடலைக் கேட்கும் போது கண்கள் சொருகிக் கொண்டு போகும்.

இதைத் தவிர, பல பாடல்களில் “கோயர்” பயன்படுத்தியிருப்பார்.   கோயர்களை பெரும்பாலும் சர்ச்சுகளில்தான் பயன்படுத்துவார்கள். அதை இளையராஜா தன் காதல் பாடல்களில் பயன்படுத்தியிருப்பார்.

அலைகள் ஓய்வதில்லை படத்தில் அமைந்த “காதல் ஓவியம்….பாடும் காவியம்….” என்னும் பாடல், காதலர்களின் தேசிய கீதம் ! அந்தப் பாடலில் கோயர் என்னும் உத்தியை வைத்து அபாரமாக ஆரம்பித்திருப்பார். இப்படி எண்ணற்ற பாடல்கள் உண்டு. தளபதி படத்தில் அமைந்த “சுந்தரி கண்னால் ஒரு சேதி” என்னும் பாடலின் “வார் பிஜிஎம்” மில் “கோயர்” உத்தியைப் பயன்படுத்திப் பின்னிப் பெடலெடுத்திருப்பார் !

7. கார்ட்ஸ்

மூன்று அல்லது நான்கு ஸ்வரங்களை ஒன்றாகப் பிடித்தால் எழும் “ஹம்காரம்”. இதை ட்யூனுக்கு ஏற்றாற் போல பின்னால் பொறுத்திக் கொண்டே வருவார்கள். இதில் பல டெக்னிக்குகள் உண்டு. இதில் இளையராஜா முதிர்ந்து கனிந்தவர்.

8.ஸ்ட்ரிங்க்ஸ் மற்றும் பேட்ஸ் :

ஒரு மெலோடியை அதன் முதுகு தாங்கி அழைத்துச் செல்லும் லேயர் இது. பலவகையான ஸ்ட்ரிங்க்ஸ் வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு டோன். குறிப்பிட்டப் பாடலுக்கு ஏற்ற வகையினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

9. பேஸ்:

இது கார்ட்ஸ் ப்ரோக்ரஷனின் முக்கிய நோட்களை தொட்டுச் செல்லும். கூடவே, ரிதத்தோடு இணைந்து அதை மெருகேற்றும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் , மெலோடி செல்லும் பாதையெங்கும் இதமாக மெத்துமெத்தென்று மலர்களை தூவி செல்லும்.

இவ்வாறு இன்னும், பார்ட்ஸ், செகண்ட்ஸ், ஆப்ளிகேட்டர்ஸ், இண்டர்ல்யூட்ஸ் என பற்பல உத்திகள் உள்ளன. அத்தனை உன்னதங்களையும் இளையராஜாவின் பாடல்களில் நாம் அனு பவிக்கலாம். மட்டுமல்ல, மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களைவிட இளையராஜாவின் பாடல்களில் முற்றிலும் புதிய கோணத்தில்  அனுபவிக்கலாம் !

இன்றைய இசையமைப்பாளர்கள் தங்களது படத்தில் ஒரு பாட்டை ஹிட் ஆக்குவதற்குள்ளாகவே முக்கி முனகுகிறார்கள்.

ஆனால், இளையராஜா தன் படத்தின் மொத்த பாடல்களையும் ஹிட் அடித்துக் காட்டினார். அப்படி, ஒன்றல்ல இரண்டல்ல…தொடர்ந்து ஹிட் அடித்துக் கொண்டே இருந்தார்.

அவரது இசை வீதிகள் தோறும் மாவிலையும் தோரணங்களும் மங்கலக் கோலங்களுமாய் களை கட்டிக் கொண்டிருக்கின்றன…!!

அவரது ஸ்டைலை அப்படியே காப்பியடித்துப் பார்த்தவர்களும் உண்டு. ஆனால் எடுபடவில்லை !

நோட்ஸ்கள் அடங்கிய அவரது புத்தகத்தை, நைஸாக லவட்டிக் கொண்டு வந்து அதை அப்படியே காப்பியடித்து இன்னொரு பாடல் அமைப்போம் என்றாலும், அது எடுபடாது..!

ஏன்…? ஏன்…எடுபட மாட்டேன் என்கிறது…?

அதே கார்ட்ஸ்தான் ! அதே டோன்தான் ! இன்னும் சொல்லப்போனால் அதே வாத்தியக்காரராகவும் கூட இருக்கலாம் ! ஆனாலும் ஏன் க்ளிக் ஆக மாட்டேன் என்கிறது….?

கவனியுங்கள் !

திருநெல்வேலி அல்வா என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் ஃபார்முலாவை திருடிக் கொண்டு வந்து சென்னை நகரத்தில் கடை போட்டால்…போணியாகாமல் ஊற்றிக் கொள்கிறதே ஏன்…?

திருநெல்வேலி அல்வாவின் சுகம் அதன் ஃபார்முலாவிலா இருக்கிறது…? இல்லை, தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் இருக்கிறது !

சென்னையில், எல்லாம் இருக்கலாம் ! ஆனால், தாமிரபரணி ஆறு இல்லையே…!!?

அதுபோல், இளையராஜாவின் கம்போஸிங்குகளுக்கு அடிப்படை ஆதார சுகமாக மிளிர்வது… அவரது ஆன்மாவுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் அவரது “இசையொழுக்கம்” என்னும் வற்றாத ஜீவ நதி !

அந்த “இசையொழுக்கமும்” கூட ட்யூஷன் வைத்துக் கொண்டால் வந்து விடாது. என்னிடம் பணம் காசு இருக்கிறது, நிறைய ஃபீஸ் தருகிறேன் என்றால் கிடைத்து விடாது. நான் மாடமாளிகையில் பிறந்தவன், வேத குலத்தில் உதித்தவன் என்று இன்ஃப்ளூயன்ஸ் செய்தாலும் இசைந்து விடாது.

அது, அதுவாக வாய்க்க வேண்டும் ! ஆம், வேறு வழியே இல்லை !

அதுவாக வாய்க்கும் வரை, பணிவே உருவானதொரு பிச்சைக்காரனாய் தாயின் “கர்ப்பங்களை” அமைதியாக  கடந்து கொண்டே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பிறவியிலும், நிரம்பி முடிந்ததோர் அணைக்கட்டைப் போல.. காலத்தை நோக்கி, ஏங்கித் தளும்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

“எனக்கும் ஒரு வாய்ப்புக் கொடேன்; இந்த சமூகத்துக்கு சில சேதிகளை சொல்லி விட்டுப் போய் விடுகிறேன்…” என மன்றாட வேண்டும் !

காலம் கனியுமொரு கணத்தில்… அதுவாகவே முன் வந்து, இந்த அகண்ட சமூகத்தில் இருந்து நம்மை சரேலென உருவி, வெளி உலகுக்கு உயர்த்திக் காட்டும் !

அதன் பிறகு…நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதற்கு உண்மையாக இருக்கிறோமோ… அவ்வளவுக்கு அவ்வளவு காலம் மகிழும் ! அள்ளிக் கொண்டு செல்லம் கொஞ்சும் !

இன்றைய காலம் கொஞ்சிக் கொண்டிருக்கும் செல்லக் குழந்தைக்குப் பெயர்….

இளையராஜா !

( தொடரும்…)