சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது சரியல்ல என்று சென்னை  உயர்நீதி மன்றம் அறிவுறுத்திய பிறகும் செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது ஏன்? மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

“அனைவருக்கும் உள்ள ஒரே கேள்வி, உயர்நீதிமன்றம் கூறிய பிறகும், செந்தில் பாலாஜியை அமைச்சராகவே வைத்திருக்க வேண்டும் என்று முதலமைச்சர் விரும்புவதில் உள்ள மர்மம் என்ன என்பதுதான்”,என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைசட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பின்னர், மருத்துவமனையில் இதயஅறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். தற்போது, புழல் சிறையில் அவர் மீண்டும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி பிறப்பித்த உத்தரவை, சில மணி நேரங்களில் அவரே நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர் அமைச்சராக தொடர்வது தமிழ்நாடு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. செந்தில் பாலாஜி மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், அதிமுக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது என்பது அரசியலமைப்பு சாசன நெறிமுறைகளுக்கு எதிரானது. தார்மீக அடிப்படையிலும் சரியானது அல்ல. சிறந்த ஆட்சிக்கும், நிர்வாக தூய்மைக்கும் இது உகந்தது அல்ல. எனவே, அமைச்சரவையில் அவர் நீடிக்க வேண்டுமா என்பதை தமிழக முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதுவும் பேசும்பொருளாக மாறி வருகிறது.

இந்த நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு அரசு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில்,  செந்தில் பாலாஜியை காப்பது போல முதலமைச்சர் ஸ்டாலின், மற்ற அமைச்சர்களையும் காப்பாற்ற முயற்சிப்பாரா என்பது கேள்விக்குறியே என தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை, இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது நாம் அனைவரும் அறிந்ததே.

பொதுமக்களிடம் பண மோசடி செய்த ஒருவரை, அமைச்சராகத் தொடரச் செய்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏன் வந்தது என்பது புரியவில்லை. பொதுமக்கள் உட்பட அனைவரும் கேள்வி எழுப்பியும், முதலமைச்சர் அதற்கு பதிலளிக்காமலேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நேற்றைய தினம், உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இத்தனை நாட்களாக, பொதுமக்களும், தமிழக பாஜக உள்ளிட்ட கட்சிகளும் எழுப்பிய கேள்விகளையே, முதலைமைச்சரை நோக்கி நீதிமன்றமும் வைத்துள்ளது.

சிறையில் இருப்பவர் எப்படி அமைச்சர் பதவிக்கான பணிகளை மேற்கொள்ள முடியும்? எந்தப் பணிகளும் ஒதுக்கப்படவில்லை என்றால், எதற்காக அவரை அமைச்சராக வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியதோடு, ஊழல் குற்றச்சாட்டு இருப்பவர்களை அமைச்சர் பதவிகளில் நியமிக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், அமைச்சருக்கானப் பணிகளை ஒருவருக்கு ஒதுக்க முடியவில்லை என்றால், அவரை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது அரசியலமைப்புச் சட்ட அடிப்படையில் இல்லாத, தார்மீக நெறிமுறைகளுக்கும் நல்லாட்சிக்கும் எதிரானது என்று உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

செந்தில் பாலாஜி மீது ஊழல் புகார்களை அடுக்கிய திமுகவே, இன்று அவரைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் சென்றதுதான் விந்தையிலும் விந்தை. சோதனைக்கு வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய அன்றே அமைச்சர் பதவிக்கான தார்மீக உரிமையை அவர் இழந்து விட்டார்.

அதன் பின்னர், அமலாக்கத் துறை விசாரணையின் போதும் கூட, பண மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை அமைச்சரவையில் வைத்திருப்பது தவறு என்று தமிழக பாஜக தொடர்ந்து முதலமைச்சரை வலியுறுத்தி வந்தது.

ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றியோ, வாக்களித்த மக்கள் குறித்தோ எந்தக் கவலையும் இல்லாத முதலமைச்சர் ஸ்டாலின், தனது சாராய அமைச்சரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்ற முயற்சியில், அரசு இயந்திரத்தையே தவறான வழியில் செலுத்தினார்.

விளைவு, இன்று உயர்நீதிமன்றமே, தமிழக அரசின் தலையில் கொட்டு வைத்திருக்கிறது. ஆனாலும் இது வரை, முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.

அனைவருக்கும் உள்ள ஒரே கேள்வி, உயர்நீதிமன்றம் கூறிய பிறகும், செந்தில் பாலாஜியை அமைச்சராகவே வைத்திருக்க வேண்டும் என்று முதலமைச்சர் விரும்புவதில் உள்ள மர்மம் என்ன என்பதுதான்.

அவரது அமைச்சரவையில் உள்ள மற்ற அமைச்சர்களுக்கு இது போன்ற பிரச்சனை வந்தால், முதலமைச்சர் ஸ்டாலின், இதே போல அவர்களையும் காப்பாற்ற முயற்சிப்பாரா என்பது கேள்விக்குறியே.

வரிசையில் மேலும் பல திமுக அமைச்சர்கள் இருப்பதால், முதலமைச்சர் தற்போது என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை தமிழக மக்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.