pillaiyar-suzhi-1
பிள்ளையார் சுழியை ஏன் முதலில் போடுகிறோம்?
சுழி என்பது வளைசல் (வளைவு). விநாயகரின் தும்பிக்கை நுனி வளைந்து இருக்கிறது அல்லவா?!. பிள்ளையார் சுழி கொம்பும் கோடும் சேர்ந்தது. இரண்டுமே விநாயகரின் தந்தத்தின் பெயர். “ஏக தந்தர்” என்பதைத் தமிழில் “ஒற்றைக் கொம்பன்” என்பார்கள்.
“ஓம்” என்னும் ஓம்கார எழுத்தின் தனித் தமிழ் வடிவம், ஏறத்தாள யானை முகத்தின் வடிவம் போலக் காணப்படும். ஓம்கார ஒலியைக் காதால் கேட்கலாம்; அதை எழுதினால் கண்ணுக்குப் புலனாகும். காதால் கேட்பது நாதம்; கண்ணுக்கு புலனாவது விந்து. நாத தத்துவத்தை வரி (கோடு) போலவும், விந்து தத்துவத்தை புள்ளியிலும் அமைப்பது உண்டு. இவ்விரண்டும் சேர்ந்ததே,”உ” என்கிற பிள்ளையார் சுழி ஆகும்.
நாதமும் விந்தும் ஒன்றுக் கொன்று துணை (சான்று) நிற்க வேண்டும். இதில்,சான்று என்னும் பதத்தை “கரி” என்றும் சொல்வர்.
ஆக, உமை வடிவாகிய “சுழி” வடிவமும், சிவ சக்தி சான்றாகிய “கரி” வடிவமும் கொண்டு நிற்கும் போது, கணபதியின் வடிவமாகிய ஓம்காரம் தோன்றும்.
எனவே தான், ஏதேனும் எழுதத் துவங்கும் முன்னர், ஒரு சுழியும் கோடும் இடுகிறோம்.
தமிழ் உயிர் எழுத்துக்கள் அனைத்தும், சுழியை அடிப்படையாகக் கொண்டவையே! பிரணவத்துக்கும் ஒலி வடிவமும்,வரி வடிவமும் உண்டு.
வரி வடிவாக விநாயகரின் திருவுருவமும், ஒழி வடிவாக அவரது ஆற்றலும் திகழ்கின்றன.