டெல்லியைச் சேர்ந்த பிரபல உணவகம் பட்டர் சிக்கன் – தால் மக்கானி ஆகிய உணவு வகைகளை தாங்கள் தான் முதலில் அறிமுகப்படுத்தியதாக தங்கள் கடை விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு பிரபல உணவகம் இதை தாங்கள் தான் அறிமுகப்படுத்தியதாகக் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.

டெல்லியில் உள்ள பிரபல உணவகமான தார்யகஞ் மீது மற்றொரு பிரபல உணவகமான மோதி மஹால் கூறியுள்ள குற்றச்சாட்டில் சிக்கன் உள்ளிட்ட இறைச்சி உணவுகள் விரைந்து காய்ந்து போவதை தடுக்க தங்களது மூதாதையர் குந்தல் லால் குஜ்ரால் அறிமுகப்படுத்தியது தான் பட்டர் சிக்கன் என்று கூறியுள்ளனர்.

குளிர்பதன வசதி இல்லாத காலகட்டத்தில் உணவு வகைகள் விரைந்து வறண்டு போகாமல் ஒருவித மசாலா கலவையை தடவி அது வறண்டுபோகாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது என்றும் பட்டர் சிக்கன் தவிர, தந்தூரி சிக்கன் மற்றும் தால் மக்கானி ஆகிய உணவு வகைகளையும் அதுபோலவே குந்தல் குஜ்ரால் செய்ததாகக் கூறியுள்ளனர்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் குடியேறிய அவர்களது குடும்பம் தங்கள் மூதாதையர் அறிமுகப்படுத்திய உணவு வகைகளை தங்கள் உணவகத்தில் பரிமாறிவருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மற்றொரு உணவகமான தார்யகஞ், தங்கள் மூதாதையரான குந்தன் லால் ஜக்கி தான் இதை அறிமுகப்படுத்தியது என்று வாதாடி வருகிறது.

ஜனவரி 16 ம் தேதி தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணை விரைவில் வர உள்ள நிலையில் மேலும் சுவையான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.