லண்டன்: சென்னை சேப்பாக்கத்தில், இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட் நடைபெற்றபோது, இங்கிலாந்து அணி ரன்களை அடித்து துவைத்துக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஓலி போப்பை நெருங்கிய விராத் கோலி, அவரிடம் ஒரு விஷயத்தை கூறியதாய் தற்போது அதை வெளிப்படுத்தியுள்ளார் ஓலி போப்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், மைதானம் பேட்டிங்கிற்கு சிறப்பாக ஒத்துழைக்கவே, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பெரிய ரன்களைக் குவித்துவிட்டது. இந்திய பந்துவீச்சாளர்கள் திணறிப் போயினர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் பேட்டிங்கின்போது, ஓலி போப் களத்தில் இருக்கையில், விராத் கோலி அவரிடம் வந்து சில விஷயங்களை கூறியதாய் தெரிவித்துள்ளார்.

அவர் பேசியுள்ளதாவது, “நான் அப்போது நான் ரன்னர் முனையில் நின்றிருந்தேன் என்று நினைவு. அப்போது விராத் கோலி என்னிடத்தில் வந்தார். இதுவே கடைசி ஃபிளாட் விக்கெட்டாக இருக்கும் என்றார். அப்போது, தொடரின் பிற போட்டிகள் சவாலாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

பின்னர், ஸ்பின் ஆடுகளம் குறித்து ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் போன்ற அனுபவஸ்தர்களிடம் பேசும்போது, அவர்களும் அந்த சவாலை ஒப்புக்கொண்டனர். அவர்களே அப்படி சொல்கிறார்கள் என்றால், சவால் எத்தகையது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம்” என்றுள்ளார் ஓலி போப்.