மும்பை: இன்று நடைமுறையில் இருக்கும் ஃபீல்டிங் விதிகள் அப்போது இருந்திருந்தால், எப்படியும் 4000 கூடுதலாக எடுத்திருக்கும் நமது ஜோடி என்றுள்ளார் முன்னாள் இந்தியக் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலி.
ஐசிசி சார்பாக வெளியிடப்பட்ட ஒரு டிவிட்டர் செய்தி, சச்சின் – கங்குலி ஆகிய இருவரையும் பழைய நினைவுகளை நோக்கி இட்டுச் சென்றது.
அந்த டிவிட்டர் செய்தியில், இந்தியாவின் சிறந்த பேட்டிங் ஜோடியாக இந்த சச்சின் – கங்குலி ஜோடியைக் குறிப்பிட்டு, அவர்கள் இருவரும் சேர்ந்து 8227 ரன்கள் குவித்ததும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.
இதனைப் பார்த்த சச்சின், “நமது சிறந்த தருணங்களை இந்தப் பதிவு நினைவுப்படுத்துகிறது தாதா. உள்வட்டத்திற்கு வெளியே 4 ஃபீல்டர்கள்தான் நிற்க வேண்டும் மற்றும் 2 புதிய பந்துகள் என்ற வசதிகள் அப்போது இருந்திருந்தால், நாம் இன்னும் எவ்வளவு கூடுதல் ரன்களை எடுத்திருப்போம்” என்று சச்சின் கேட்க,
“எப்படியும் கூடுதலாக 4000 ரன்களாவது நமது கூட்டணியில் எடுத்திருப்போம். போட்டியின் முதல் ஓவரிலிருந்தே பந்துகள் கவர்டிரைவ் மூலம் பவுண்டரிக்குப் பறப்பது தெரிகிறது. இப்படித்தான் 50 ஓவர்களும் இருந்திருக்கும்” என்றார் கங்குலி.