சென்னை,

தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மேதின பூங்காவில் மரியாதை செலுத்தினார் திமுக செயல்தலைவர் ஸ்ட்லின். அப்போது, ரெய்டு நடத்தப்பட்ட தமிழகஅமைச்சர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று மத்திய அரசுக்கு கேள்வி விடுத்தார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறியதாவது,

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண் காணித்து வருகிறார்கள்.  எனவே மருத்துவர்களின் அனுமதி கிடைத்தால் பிறந்த நாளன்று தொண்டர்களை சந்திப்பார் என்று கூறினார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு,

கேள்வி:- நீங்கள் அ.தி.மு.க. வின் ஒரு பிரிவுக்கு ஆதரவாக பேசுவதாக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டுகிறாரே?

பதில்:-  எங்கே அப்படி பேசினேன்? நான் சொல்வதில் ஒரு பகுதியை மட்டும் அவர்கள் படிக்கிறார்கள். அதற்கு மட்டும் பதில் சொல்கிறார்கள். அதை வைத்து நீங்களும், கேள்வி கேட்கிறீர்கள். அது தான் எனக்கு வருத்தமாக உள்ளது.

நான் கேட்பதெல்லாம் பாரதீய ஜனதா அரசு, மாநில சுயாட்சி என்ற கொள்கைக்கு எதிராக மாநிலத்தில் ஏன்? தேவையில்லாமல் தலையிடுகிறது என்பதும் ஒன்று.

அதே நேரத்தில் ஏற்கனவே தமிழக தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீடு- அலுவலகத்தில் நடந்த வருமானவரி சோதனை, அதே போல் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை இவற்றை ஒழுங்குபடுத்தி விட்டு அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை பா.ஜனதா அரசு தெரிவிக்க வேண்டும்.

இது வரை சோதனை விவரம் முழுமையாக வெளியிடப்படவில்லை. எனவே இப்போது மற்றவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை வேண்டாம் என்று சொல்லவில்லை. இதுவும் ஒரு கண்துடைப்பாக இருந்து விடக்கூடாது என்பதற்காக இதை கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.