கொல்கத்தா: மாடுகளை கடத்திய வழக்கில், மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு நெருக்கமான அனுப்ரதா மொண்டலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், மம்தாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பாஜக அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளவர் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மத்தியஅரசின் பல்வேறு திட்டங்களை எதிர்த்து, அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். எந்தவொரு விஷயத்திலும் தன்னையே முன்னிலைப்படுத்திக்கொள்ளும் மனோபாவம் கொண்டவர். மறைந்த ஜெயலலிதாவை போன்று, தடாலடி அரசியலுக்கு சொந்தமானவர்.

சமீப காலமாக அவருக்கு நெருக்கமானவர்கள் பல்வேறு வழக்குகள் காரணமாக சிக்கி வருகின்றனர். சமீபத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், கோடிக்கணக்கான பணமும் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மேலும் பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றன. இது மேற்குவங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், மாடு கடத்தல் வழக்கில்,  மம்தாவின் நெருங்கிய உதவியாளர் அனுப்ரதா  மோண்டலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.   மாடுகள் கடத்தல் வழக்கில், கடந்த மூன்று நாள்களாக விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை இன்று அதிகாலை (வியாழக்கிழமை)  பிர்பும் மாவட்டத் தலைவரின் வீட்டிற்கு வந்த சிபிஐ குழுவால் கிட்டத்தட்ட ஒரு மணி நேர விசாரணைக்குப் பிறகு அனுப்ரதா மொண்டல் கைது செய்யப்பட்டார்.

அனுப்ரதா மொண்டல்  திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிர்பம் மாவட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பாகுபலி என்று கட்சி தொண்டர்களால் அழைக்கப் படுபவர்.  அனுப்ரதா மோண்டல் இல்லாமல் பிம்பம் பகுதியில் அணுவும் அசையாது என்பது தொண்டர்களின் வாக்கு. இவர் ஹைபோக்ஸியா என்ற நோயால் பாதிக்கப்பட்டவர். எப்போதும் ஆக்ஸிஜனுடன்தான் நடமாடுவார்.

பல சர்ச்சைகளுக்கு ஆளான இவர் மீது பல குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. ஏற்கனவே, தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறை குறித்து சிபிஐ அதிகாரிகள் அனுப்பிரதாவிடம் விசாரணை நடத்திய நிலையில் தற்போது மாடுகள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ளார்.