கொல்கத்தா

நேற்று மேற்கு வங்க சட்டசபையில் மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரையும் மணிப்பூரில் தொடரும் கலவரம் கவலை அடைய வைத்துள்ளது.  நேற்று இந்த வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து மேற்கு வங்க சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்தைச் சட்டசபை விவகாரத்துறை  அமைச்சர் சொவந்தேப் சட்டோபாத்யாய் தாக்கல் செய்தார். முதல்வர் மம்தா பானர்ஜி, கலவரத்தை அடக்காத மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,

‘மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும். வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல முடியாதது வெட்கக்கேடு. மணிப்பூரில் அமைதி ஏற்படுத்தப் பிரதமரால் முடியாவிட்டால், அதற்கு ‘இந்தியா’ கூட்டணியை அனுமதிக்க வேண்டும்’

என்று கூறினார்.

பாஜகவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி இந்த தீர்மானத்துக்குக் கண்டனம் தெரிவித்தார். கூட்டாட்சி தத்துவத்துக்கு இது எதிரானது எனக் கூறிய அவர், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றும் கூறினார்.

இந்த தீர்மானத்தைக் கண்டித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆயினும் சட்டசபையில் இந்த தீர்மானம் நிறைவேறியது.