சென்னை:

மிழக சட்டப்பேரவையில்  எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வறட்சி மற்றும் குடிதண்ணீர் தட்டுப்பாடு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் வேலுமணி,  சென்னைக்கு குடிநீர் பிரச்சனை வந்தால் சமாளித்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதம் இன்று 3வது நாளாக தமிழக சட்டமன்றத்தில் நடை பெற்றது.  இன்றை கூட்டத்தில்,  வறட்சி பாதிப்பு குறித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் உருவாகும் சூழல் உள்ளதாகவும், ஏரிகளில் நீர் இருப்பு அதளபாதாளத்துக்கு சென்றுள்ளது. தற்போதே  தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது, 20 மாவட்டங் களில் நிலத்தடி நீர் குறைந்து விட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது; சென்னையில் 55% மழை குறைவால் குடி நீருக்கு அவதி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  மேலும் 25,000 கோடி ரூபாய்க்கு மொத்தமாக குடிநீர் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,  குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன’ என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி  கூறியதாவது,

பெருநகர சென்னை மாநகராட்சியில் 2,600 கோடி ரூபாயிலும், பிற மாநகராட்சிகளில் 4,450 கோடி ரூபாய் மதிப்பிலும் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தேவையான குடிநீர் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், குடிநீர் பற்றாக்குறை பிரச்னையை தீர்க்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  ஆழ்துளை கிணறுகள் அமைத்து லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும். மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 23 ஆயிரம் குடிநீர் திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும், நடப்பு ஆண்டில் குடிநீர் பற்றாக்குறையை போக்க 158 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடப்பதாகவும் தெரிவித்தார்.

மதுரையில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நிரந்தர குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி யுள்ளதாகவும், சென்னையில் இந்த ஆண்டு இறுதிவரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அமைச்சர் பதில் தெரிவித்தார்.