சென்னை: குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல, அவர்கள் கொலையாளிகள் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது என  பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்து உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.