நாக்பூர்: நாங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலான இடங்களைப் பெற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளார் பாரதீய ஜனதா சார்பில் மராட்டியத்தின் நாக்பூர் தொகுதியில் வென்றுள்ள நிதின் கட்கரி.

முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த இவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் செல்லப்பிள்ளையாக கருதப்படுபவர். இந்தமுறை தனது செல்வாக்கின் மூலம் மத்திய அமைச்சரவையில் முக்கிய இடம்பிடிப்பார் என்று கருதப்படுகிறது.

அவர் கூறியதாவது, “நாங்கள் இந்த மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக இடங்களைப் பெற்றுள்ளோம். தெலுங்கானா போன்ற மாநிலங்களில் 4 இடங்கள் வென்றிருப்பதை யாரும் மறந்துவிட முடியாது.

அந்த மாநிலத்தில் கடந்தமுறை நாங்கள் ஒரு இடத்தையும் வெல்லவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மராட்டிய மாநிலத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகி வருகிறோம். சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா – சிவசேனா கூட்டணி பெரிய வெற்றியை பெறும்.

நாக்பூர் நகரை காற்று மற்றும் நீர் மாசற்ற நகரமாக மாற்ற முயல்வேன். கடந்தமுறை விடுபட்ட திட்டங்களை இந்தமுறை பூர்த்தி செய்ய பாடுபடுவேன்” என்றார்.