சென்னை: திருக்குறளைப் போல் அதிகாரத்தை செயல்படுத்துகிறோம்; என கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழாவில் காணொளி மூலம் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.கோவை கொடீசியா வளாகத்தில் தொடங்கியுள்ள ஸ்டார்ட் அப் திருவிழா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் உரையாற்றினார். கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெறும் விழாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர், இளம் தொழில் முனைவோர் பங்கேற்றுள்ளனர்.

பல்வேறு துறைகளில் புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தமிழக அரசு சார்பில் ‘ஸ்டார்ட் அப் திருவிழா’ என்ற பெயரில் தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் இன்று (ஆக.19) முதல் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில்,  முதல் தலைமுறை தொழில்முனைவோர், தொழில்துறையில் சாதனை படைத்தவர்கள், உதாரணமாக கல்வித்துறையில் சாதனை படைத்து வரும் சங்கர் வாணவராயர், எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் சிறந்து விளங்கும் ஹேமலதா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்.

இவை எல்லாவற்றுக்கும் மேல் தொழில் முதலீடுகளுக்கு உதவும் நிதி முதலீடு செய்யும் நிறுவனங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள கண்காட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதில் பங்கேற்பதன் மூலம் விழிப்புணர்வு, வல்லுநர்களின் ஆலோசனைகளை பெறுதல், நிதி முதலீட்டாளர்களை சந்தித்து பேசுதல், யோசனைகளை பரிமாறிக்கொள்ளுதல் உள்ளிட்டவற்றுடன் தங்களுக்கு உள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இன்றும், நாளையும் கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில்‌ நடைபெற உள்ள தமிழ்நாடு ஸ்டார்ட்‌ அப்‌ திருவிழாவில் 450-க்கும்‌ மேற்பட்ட அரங்குகள்‌ அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில்‌ பங்கேற்க 1,500-க்கும் மேற்பட்டோர்‌ முன்பதிவு செய்துள்ளனர்‌. 50-க்கும்‌ மேற்பட்ட வல்லுநர்களின் சிறப்புரை மற்றும் கலந்துரையாடலுடன் கூடிய கருத்தரங்கு‌ நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் டி.ஆர் பி.ராஜா, தொழில்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த  ஸ்டார்ட் அப் விழாவில் காணொளி காட்சி மூலம் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்,  “அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. எந்தத் துறையாக இருந்தாலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ வேண்டும். கோவைதான் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கூறியவர்,  சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி முக்கியமானது. 450 அரங்குகளுடன் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி முக்கியம். 2,300 ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை தற்போது 3 மடங்காக அதிகரித்துள்ளன. மக்கள் அளித்த அதிகாரத்தை வானளாவியதாக நினைப்பதில்லை. திருக்குறளைப் போல் நெறிப்படுத்தி அதிகாரத்தைச் செயல்படுத்திவருகிறோம்.

இதுவரை 109 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.10 கோடி வரை ஆதார நிதி வழங்கியுள்ளோம். சமூக நீதியுடன் சமச்சீர் தொழில் வளர்ச்சி என்பதே அரசின் நோக்கம். பல்வேறு மாவட்டங்களில் வட்டார தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன” என்றார். ஸ்டார்ட் அப் திருவிழாவில் 450 அரங்குகள் கொண்டு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.   50க்கும் மேற்பட்ட வல்லுநர்களுடன் கருத்தரங்கு நடைபெற உள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்படுகிறது என முதல்வர் தெரிவித்துள்ளார்.

2300 ஆக இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை தற்போது 3 மடங்காக அதிகரித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். எந்த துறையாக இருந்தாலும் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்றும் முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.