நெட்டிசன்:

                          கோதண்டராமன் சபாபதி அவர்களின் முகநூல் பதிவு:

சாதீய படிநிலைகளில் என்னைவிட மேல்சாதி என்று கொண்டாடப்படும் ஒரு சாதியை சேர்ந்த ஒருவனுடன் நான் மிகுந்த நட்பாக இருந்தேன்.

என் நல விரும்பிகள் “வேண்டாம் இத்தனை நெருக்கம்” என்றார்கள்.

” அவன் அப்படியில்லை” என்று நான் அவர்கள் வார்த்தைகளை உதாசீனப்படுத்தினேன்.

ஒரு நாள் அந்த நண்பன் இப்படி சொன்னான்.

“எனக்கு உன் சாதியை சார்ந்த ஒருவன்தான் நெருங்கிய நண்பன். நான் சாதியெல்லாம் பார்ப்பதில்லை. அவனை என் வீட்டு அடுப்பங்கரை வரை அனுமதித்திருக்கிறேன்”

அவனும் மனிதன்தானே என்கிற என்னத்தைவிட தாழ்த்தப்பட்டவரை வீடுவரை அனுமதிக்கிறேன் என்கிற விளம்பரமே அவன் பேச்சில் மிகுந்திருந்தது.

சுருக்கமாக சொன்னால் இன்றைய
“தருண்விஜய்தனமே” அவனிடம் மிகுந்திருந்தது.

அன்றோடு அந்த நட்பின் நெருக்கத்தை குறைத்துக்கொண்டேன்.அவனுடைய அந்த நண்பனின் அறியாமையை நினைத்து பரிதாபப்பட்டுக்கொண்டேன்.

தருண்விஜயை கண்டிக்கும் நம்மில் பலருக்கு ஏன் எனக்குள்ளே கூட அந்த தருண்விஜய்த்தணம் இருக்கத்தான் செய்கிறது.மொத்தத்தில் நிறம்.உட்பிரிவுகளாக மதம் சாதி.உணர்வு ஒன்றுதான்.

தருண்விஜயை கண்டிக்கும் நாம் இதையும் உணரவேண்டும்.

கவனிக்கவும்.

உடனே திருந்துங்கள் என்று சொல்லவில்லை.அப்படியெல்லாம் ஓர் இரவு ஒரு பொழுதில் திருந்திவிட மாட்டோம்.

உணருங்கள்.

சிப்பிக்குள் விழுந்த மழைத்துளியாக அது நம் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கும்.

ஒரு நாள் அது நல் முத்தாகும்.