விருதுநகர்: நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதாக சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

 ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால், அங்கு பெய்து கனமழை காரணமாக, மலைப்பகுதிகளில் செல்லும்  நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால்,  பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று பெரியோர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் கோயில் கொண்டுள்ளார், சுந்தர மகாலிங்கப் பெருமானார். மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது சதுரகிரி. மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், பஞ்சபூத லிங்கம் என்பர். இந்த மகாலிங்க மலையை ‘சித்தர்கள் வாழும் பூமி’ என்று அழைக்கின்றனர்
இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

இந்நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு இம்மாத பிரதோஷம் மற்றும் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு பெய்து கனமழை காரணமாக, மலைப்பகுதிகளில் செல்லும்  நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால்,  பக்தர்கள் மலையேற தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது. மலையேறி சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வனத்துறையினர் விதித்துள்ள தடையால் ஏமாற்றமடைந்துள்ளனர்.