சென்னை

பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னைக்குத் தேவையான குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்த ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8 மணியில் இருந்து நேற்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்தததால்ல் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.

இதில் குறிப்பாக, பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 15 மி.மீ. என்ற அளவில் மழை பெய்தது. அதைப்போல், சோழவரம் 29, புழல் 9, கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை 10, செம்பரம்பாக்கம் 26.4 மற்றும் தாமரைப்பாக்கம் 69, கொரட்டூர் அனைக்கட்டு 43, நுங்கம்பாக்கம் 6.2, மீனம்பாக்கம் 16.4 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பெய்துள்ளது.

குறிப்பாகப் பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் முழு கொள்ளளவான 35 அடியை எட்டி விடலாம். எனவே அணையின் பாதுகாப்பு கருதி, ஏரியில் இருந்து உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிட முடிவு செய்யப்பட்டு நேற்று மாலை 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.   தொடர்ந்து ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகப்படியானால் நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக உபரி நீர் திறந்து விடப்படலாம், .

ஆகவே நீர்வளத்துறை அதிகாரிகள்,

”கொசஸ்தலை ஆறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன் பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர் பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நப்பாளையம், இளையன்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையன்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் கரையின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்” 

என்று எச்சரித்துள்ளனர்.