டில்லி,

‘இந்தியா – பாகிஸ்தான் எல்லையில், சுவர் எழுப்பும் திட்டம் எதுவும் இல்லை’ என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இந்தை ஆண்டின் இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்றைய கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணைஅமைச்சர்,

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில், சுவர் எழுப்பும் திட்டம் எதுவும் இல்லை. அதேநேரத்தில், எல்லையில், பாதுகாப்பை பலப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

மேலும்,  பாதுகாப்பு பணியில் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  எல்லையில், தடுப்பு வேலியும், சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இரவை பகலாக்கும் வகையில், மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதி நவீன கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு, பயங்கரவாதிகள் ஊடுருவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு படை வீரர்கள், ரோந்து பணியில் ஈடுபட, அதி நவீன ஆயுதங்களும், வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.