நெல்லூர்: ஆந்திராவில் ஏப்ரல் 11ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நெல்லூர் மாவட்டத்தின் ஒரு அரசுப் பள்ளியின் வளாகத்தில், விவிபிஏடி இயந்திரங்களின் ஸ்லிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணாக்கர்களின் கண்களில் இவைகள் தென்படவே, அவர்கள் தங்களின் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வருவாய் அதிகாரிகளுக்கு தகவல் போய்சேர, அவர்கள் நேரடியாக வந்து சோதனை மேற்கொண்டனர்.

இந்தத் தகவல் மீடியாக்களுக்கு பரவி, சமூக வலைதளங்களிலும் வைரல் ஆனது. ஆனால், இவை வாக்காளர் ஸ்லிப் இல்லை என்றும், உண்மையான வாக்குப் பதிவுக்கு முன்னதாக, இயந்திரங்களை சோதனை செய்யும்போது வரும் ஸ்லிப்புகள்தான் அவை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அத்தகைய ஸ்லிப்புகள் உடனடியாக அழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அலட்சியத்தால் அப்படியே விடப்பட்டுள்ளன என்று தகவல்கள் கூறுகின்றன.

– மதுரை மாயாண்டி