சென்னை:

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி கொண்ட விவிபாட் (VVPAT) இயந்திரம்  வரும் மக்களவைத் தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.

விரைவில் அறிவிக்கப்பட உள்ள நாடாளுமன்ற தேர்தலின்போது, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் 100 சதவீதம் ஒப்புகை சீட்டு முறை (VVPAT) இயந்திரம் பொருத்தி நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மனுவில்,  இது தொடர்பாக கடந்த 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்னும் இந்த  ஏற்படுத்தப்படவில்லை என மனுவில் புகார் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது  தேர்தல் ஆணைய தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், மக்களவை தேர்தலில் நூறு சதவீதம் ஒப்புகை சீட்டு இயந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதுகுறித்து, அனைத்து  தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் பதிலை தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.