ஸ்ரீநகர்

மோசமான வானிலை காரணமாக மெகபூபா முப்தி போட்டியிடும் அனந்தநாக் – ரஜோரி தொகுதியில் வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வரும் 7 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக்-ரஜோரி மக்களவை தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தின.

ஆனால் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் தேர்தலை ஒத்திவைக்க கூடாது எனத் தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். தேர்தல் ஆணையம் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திடம் இது தொடர்பாக உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டிருந்தது.

தற்போது அனந்த்நாக்-ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ந் தேதிக்கு பதிலாக மே 25-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இந்த தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் மியான் அல்தாப் மற்றும் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்பட 21 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.