கோட்டா

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஒரு மாணவ்ர் நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் பயிற்சி அளிக்கப்படுகிறது.   இங்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை, நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அரியானாவைச் சேர்ந்த சுமித் பஞ்சால் என்ற 20 வயது மாணவர், தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று கோட்டா நகரில் தங்கி படித்து வந்த மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாரத் குமார் ராஜ்புட் என்ற 20 வயது மாணவர், கோட்டாவில் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியில் தங்கி, கடந்த ஓராண்டாக நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.

ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ள பாரத் குமார், 3-வது முறையாக வரும் மே 5-ந்தேதி நீட் தேர்வு எழுத இருந்தார். பாரத் குமாருடன் அவரது உறவினர் ரோகித் என்பவரும் தங்கியிருந்து நீட் தேர்வுக்காக படித்து வந்துள்ளார்.  நேற்று காலை 10.30 மணியளவில் ரோகித் வெளியே சென்றிருந்த சமயத்தில், அறையில் தனியாக இருந்த பாரத் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பிறகு சுமார் 11.15 மணியளவில் ரோகித் தனது அறைக்கு திரும்பி வந்து பார்த்தபோது, பாரத் குமார் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து பாரத் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக பாரத் குமார் தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில்ல், “மன்னித்துவிடுங்கள் அப்பா, என்னால் இந்த முறையும் வெற்றி பெற முடியாது” என்று எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை கோட்டா நகரில் பயிற்சி பெற்று வந்த 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் கடந்த 2023-ம் ஆண்டில் கோட்டா நகரில் பயின்று வந்த 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க கோட்டாவில் உள்ள பயிற்சி மையங்களுக்கு ராஜஸ்தான் அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள போதிலும் இந்நிகழ்வுகள் தொடர்கின்றன