மும்பை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்ததையடுத்து, அவர் பயன்படுத்திய 7ம் நம்பர் ஜெர்சிக்கும் நிரந்தர ஓய்வை அளிக்க வேண்டுமென்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இன்ஸ்டாகிராம் மூலமாக, 39 வயதான தோனி, திடீரென ஓய்வை அறிவித்தார். இதன்மூலம் அவரின் 16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

“ராஞ்சியிலிருந்து வந்து 2004ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்ற தோனி, தனது அமைதியான சுபாவம், கூர்மையான புரிந்துணர்வு, சிறந்த தலைமைத்துவப் பண்பு ஆகியவற்றால் இந்தியக் கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றியவர்” என்று தனது அறிவிப்பில் கூறியுள்ளது பிசிசிஐ.

தோனிக்கு 7.8 மில்லியன் டிவிட்டர் ஃபாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், தோனி ஓய்வு பெற்றுள்ளதையடுத்து, அவர் பயன்படுத்திய 7ம் எண் கொண்ட ஜெர்சிக்கும் நிரந்தர ஓய்வளிக்க வேண்டுமென்றும், அந்த எண் ஜெர்சி‍யை வேறு எந்த வீரரும் பயன்படுத்துவதை தாங்கள் பார்க்க விரும்பவில்லை என்றுள்ளனர் அவரின் ரசிகர்கள் உள்ளிட்ட பலர்.