ராஞ்சி: தற்போது பிசிசிஐ செயலாளராக உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா அவமானப்படுத்தியதாலேயே, முன்னாள் கேப்டன் தோனி திடீரென ஓய்வுபெற்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில், பாரதீய ஜனதாவிற்காக பிரச்சாரம் செய்ய தோனியை பலமுறை அணுகியதாகவும், ஆனால் அதற்கு தோனி தரப்பில் உறுதியாக மறுத்துவிட்டதால், அதை மனதில் வைத்து தற்போது அவரை அவமானப்படுத்தியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்தியாவிற்காக, இதுவரை எந்த கேப்டனும் செய்யாத சாதனைகளை செய்துள்ள தோனிக்கு, ஒரு வழியனுப்பு போட்டிக்கூட நடத்தப்படாதது ஏன்? என்ற கேள்வி எழுந்த நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது; தேர்தல் பிரச்சாரத்திற்கு சம்மதிக்க வைப்பதற்காக, 2019 அக்டோபர் மாதம் பிசிசிஐ செயலாளராக அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவை நியமித்து, அவர் மூலம் மீண்டும் தோனிக்கு மிரட்டல் விடப்பட்டது. அந்த மிரட்டலுக்கும் தோனி பணியவில்லை. இறுதியில் 2019 டிசம்பர் மாதம் நடந்த ஜார்கண்ட் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியிடம் தோற்றது பாஜக. இதனால் பாஜகவின் கோபம் தோனியின் மேல் திரும்பியது.

பிசிசிஐ செயலர் ஜெய்ஷா தரப்பில் தோனியிடம், இனிமேல் வழியனுப்பு விழாவிற்கு கூட எந்த போட்டியிலும் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட மாட்டீர்கள் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டிற்க்கான பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்தும் செயலாளர் ஜெய்ஷாவால் தோனி தூக்கி எறியப்பட்டார்.

கிரிக்கெட் சாதனையாளர், சீனியர் கிரேட்-A வீரர் ஒருவருக்கு, ஒப்பந்தம்கூட வழங்கப்படாமல் நீக்கப்பட்டது பிசிசிஐ வரலாற்றிலேயே தோனி ஒருவருக்குத்தான் என்று கூறப்பட்டுள்ளது.