கர்நாடகாவில் நடந்த திரைப்பட விழாவில் கலந்துகொண்ட  நடிகர் விஷால், தைரியமாக, “’தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும்’ என்று மேடையில் பேசினார். .

தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச்செயலருமான விஷால், பெங்களூருவில் நடந்த, ‘ரகுவீரா’ கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நேற்று கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய அவர், “ கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவானாலும், தமிழில் பேசுவதில் பெருமை கொள்கிறேன். யாரும் தவறாக நினைக்க வேண்டாம். தண்ணீர் கேட்பது, தமிழர்களுடைய உரிமை. நாம் அனைவரும் இந்தியர்கள். மாநில பேதம் பார்ப்பது தவறு.

தமிழகத்தில், ஏராளமான கன்னட மக்கள்  வாழ்கின்றனர். அதேபோல், கர்நாடகாவிலும் எண்ணற்ற தமிழ் மக்கள்  வாழ்கின்றனர். அனைவருக்கும் பாதுகாப்பு தருவது, அந்த மாநில மக்களின் கடமை.

தண்ணீர் என்பது கர்நாடகாவுக்கு மட்டுமே  உரிமையானது அல்ல.  எங்களுக்கும் உரிமை இருப்பதாலேயே கேட்கிறோம். ‘தண்ணீர் கேட்க கூடாது’ என சொல்ல, யாருக்கும் உரிமைகிடையாது .

கர்நாடகாவிலிருந்து யார் வந்து, தமிழகத்தில் படம் எடுத்தாலும், தயாரிப்பாளர் சங்கம் முழு ஒத்துழைப்பு  அளிக்கும்” என்று விஷால் பேசினார்.

 

விழாவில் பேசிய கன்னட அமைப்பினர், ‘தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று நாங்கள் சொல்லவில்லை. எங்களுக்கே தண்ணீர் இல்லை என்று தான் கூறுகிறோம்’ என்று பதில் அளித்தனர்.

ம்…  இங்கே தமிழக உரிமை பற்றி பேசிவிட்டு, கர்நாடகா சென்றவுடன் அதற்காக மன்னிப்பு கேட்டு கன்னட வெறியர்களுக்கு ஆதரவாக பேசும் சூப்பர் ஸ்டார்கள் இருக்கும் நிலையில்…  தைரியமாக தமிழக உரிமைக் குரலை எழுப்பிய விஷாலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!