டில்லி

ந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி டி 20 கிரிக்கெட் அணிக்கும் ஒரு நாள் போட்டி அணிக்கும் தலைவராக உள்ளார்.   உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விரைவில் துபாயில் நடைபெற உள்ளது.  இந்த போட்டியில் விராட் கோலியின் தலைமையிலான அணி வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு உள்ளது.  இந்நிலையில் அவர் இந்திய டி 20 கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

விராட் கோலி தனது டிவிட்டரில், “நான் இந்தியாவுக்காக விளையாடியது மட்டுமல்லாமல், இந்திய அணியை வழிநடத்தியது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அதிர்ஷ்டம் ஆகும். நான் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவனாக இருந்த நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. எனது அணி வீரர்கள், அணி நிர்வாக குழு, தேர்வுக் குழு, பயிற்சியாளர்கள் மற்றும் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என நினைத்த ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி.  அவர்கள் இல்லாமல் இதைச் செய்திருக்க முடியாது.

எனது வேலைப் பளு என்பது மிக முக்கியமான விஷயம் என்பதைப் புரிந்துகொள்கிறேன். நான் கடந்த 8 முதல் 9 ஆண்டுகளாக மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருவதால் அதிக வேலைப் பளு இருப்பதை உணர்கிறேன். அதைப் போல் கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக அணியின் தலைவனாகச் செயல்பட்டு வருவதாலும் வேலைப் பளு அதிகமாக உள்ளது.

ஆகவே இந்திய அணியை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வழிநடத்த எனக்குச் சற்று வேலை குறைப்புத் தேவைப்படுவதாக நினைக்கிறேன். அதனால் அக்டோபர் மாதம் துபாயில் நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடருடன் டி20 தலைவன் பதவியிலிருந்து விலகுகிறேன். தலைவன் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக டி20 அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாகக் கொடுப்பேன்” எனப் பதிந்து விளக்கம் அளித்துள்ளார்.