சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு 20, 22, 23V, 27D, 47, 47A, 63, S43, S44 ஆகிய 9 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் சென்னையில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்தப் பணிகளுக்காக வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தை தற்காலிகமாக மூட மாநகர போக்குவரத்துத் துறை தீர்மானித்துள்ளது.
மாதவரம் மில்க் காலனி முதல் கோயம்பேடு, போரூர், ஆலந்தூர், வேளச்சேரி வழியாக சோழிங்கநல்லூர் வரை 44.6 கி.மீ. தூரம் அமைக்கப்பட உள்ள ஐந்தாவது வழித்தட பணிகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 20, 23V, 27D, ஆகிய மூன்று வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் இனி ஐ.சி.எப். பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு நாதமுனி அருகே ‘U’ டர்ன் எடுத்து வில்லிவாக்கம் (கல்பனா) பேருந்து நிலையம் வழியாக அதன் வழக்கமான வழித்தடத்தில் செல்லும்.
தவிர, தடம் எண் 63 ல் திருவேற்காடு வரை இயக்கப்பட்டு வந்த பேருந்துகளும் ஐ.சி.எப். பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
தடம் எண் 22 ல் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் இனி கொரட்டூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
S43, S44 ஆகிய சிற்றுந்துகள் எப்போதும் போல் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தவிர, 47, 47A, ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளும் ஐ.சி.எப். பேருந்து நிலையத்தில் இருந்தே புறப்படும் என்று தெரிகிறது.
7 வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் அனைத்தும் பிப்ரவரி 9ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.