லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜூலை 16-ம் தேதி தொடங்கப்பட்டது.

இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது திரைப்படம் . இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரனும், இசையமைப்பாளராக அனிருத்தும் பணிபுரிந்து வருகிறார்கள்.

‘விக்ரம்’ திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. கமல் ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் மற்றும் நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சண்டைப் பயிற்சிக்கு இரட்டையர்களாக அன்பறிவ் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

கமலுக்கு மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காளிதாஸ் ஜெயராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் படத்தின் உரிமைகள் விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளன. முதலாவதாக ‘விக்ரம்’ படத்தின் இந்தி டப்பிங் உரிமையைப் பெரும் விலைகொடுத்து கோல்ட் மைன் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சுமார் 37 கோடி ரூபாய் கொடுத்துக் கைப்பற்றி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல் நடிப்பில் வெளியான படங்களின் இந்தி டப்பிங் உரிமை விற்பனையில் ‘விக்ரம்’ படத்தின் உரிமையே அதிக விலைக்குப் போயிருக்கிறது. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். மேலும், டிஜிட்டல், தொலைக்காட்சி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட உரிமத்தைக் கைப்பற்ற இப்போதே கடும் போட்டி நிலவி வருகிறது.