சென்னை:

மிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தின் பின்னணியில் உள்ள பசுந்தோல் போர்த்திய புலிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றமே தானாக முன்வந்து தனது நேரடி கண்காணிப்பில் நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பேராசிரியை நிர்மலா தேவி  விவகாரத்தில் நீதிமன்றமே தானாக முன்வந்து தனது நேரடி கண்காணிப்பில் நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் . அந்த விசாரணைக் குழு உண்மைகளைக் கண்டறிந்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அப்போதுதான் பெற்றோர்கள் அச்சமின்றி தனது பெண் பிள்ளைகளை பள்ளி கல்லூரிகள் மற்றும் பணிக்கு தைரியமாக அனுப்பும் சூழ்நிலை உருவாகும்.

பேராசிரியை விவகாரத்தில் ஆளுநரே சந்தேக வளையத்தில் இருப்பதால், சிபிஐ கூட இதை நேர்மையாக விசாரிக்குமா என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது.

நிர்மலா தேவியின் பின்னணியில் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் இருப்பார்களோ எனும் சந்தேகம் எழுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக ஆளுநர் தாமாக முன்வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்திருப்பது, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற பழமொழியையே நினைவுபடுத்துகிறது. நிர்மலா தேவியை பார்த்த தில்லை எனக் கூறியிருப்பதும் தமக்கு 78 வயதாகிறது, கொள்ளுப்பேரன்கள் இருக்கிறார்கள் என தன்னிலை விளக்கம் கூறியிருப்பது எண்ணற்ற கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புகிறது.

நிர்மலா தேவியின் பின்னணியில் உள்ள பசுந்தோல் போர்த்திய புலிகள் போன்ற சக்தி வாய்ந்த அதிகாரமிக்க நபர்கள் யார் யார் என்பதை கண்டறிய வேண்டும்.

“துணைப் பேராசிரியையாகப் பணிபுரியும் நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான வழிக்கு அழைத்திருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

இது, உலக அளவில் உள்ள தமிழர்களின் தன்மானத்துக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. நிர்மலா தேவி எந்தத் தைரியத்தில் இதுபோன்ற செயல்களைச் செய்கிறார் என்பதைச் சமூக வலைதளங்களின்மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

மாணவிகளைச் சரியாக வழிநடத்தவேண்டிய ஆசிரியையே இது போன்ற செயல்களைச் செய்வது, ‘வேலியே பயிரை மேய்வது’ போல உள்ளது.

 

தமிழகத்தின் மூத்த குடிமகனாக இருக்கும் ஆளுநர், பத்திரிகையாளரின் கன்னத்தைத் தொட்டது அநாகரிகத்தின் உச்சம். எந்தப் பயமும் இன்றி நள்ளிரவில்கூட ஒரு பெண் தனியாக வெளியில் செல்லும் நிலை வரும்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்.

ஆனால் இங்கு, சிறுமிகள், மாணவிகள், பெண்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது.  இதுபோன்ற செயல்களைத் தடுத்துநிறுத்த, கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும்.

பேராசிரியை நிர்மலா தேவிக்கு கிடைக்கக்கூடிய தண்டனை, எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்ற எண்ணத்தை உருவாக வேண்டும்.

தமிழக ஆளுநரே சந்தேக வளையத்துக்குள் இருபதால், சிபிஐ கூட இதை நேர்மையாக விசாரிக்குமா என்பது சந்தேகம்தான்.

நிர்மலா தேவின் பின்னணியில் உள்ள  ‘பசுத் தோல் போர்த்திய புலிகள்’ போன்ற சக்திவாய்ந்த அதிகாரம் மிக்க நபர்கள் எல்லோரையும் கண்டறிய, நீதிமன்றமே தாமாக முன்வந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைக்கொண்ட விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்”.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.