சென்னை: “தமிழக வளர்ச்சிக்கு எதிராக பேசுகிறார் விஜய்” என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விமர்சித்து உள்ளார்.

பரந்தூரில் அமைய உள்ள  சர்வதேச பசுமை விமான நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் 900 நாட்களை கடந்து போராடி வரும் நிலையில், அங்குள்ள மக்களை சந்தித்த தவெக தலைவர் விஜய், பரந்தூரில் அமைய உள்ள விமான நிலைய திட்டத்தை கைவிட்டு வேறு இடத்தில் அமைக்குமாறு வேண்டுகோள் கொடுத்தார். மேலும், தான் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர் இல்லை என்று கூறியதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படுவதால், அந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என கூறினார்.

விஜய்-ன் பேச்சுக்கு ஒரு தரப்பினர் ஆதரவும் திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், விஜய் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தற்போதுள்ள சென்னை விமான நிலையம் மோசமாக உள்ளது. அதை சர்வதேச விமான நிலையம் என்று கூற முடியாத அளவுக்கு உள்ளது என்றவர், ஒரு மாநிலத்தின் மற்றும் நாட்டின் வளர்ச்சி, அங்குள்ள  விமான நிலையங்களை  வைத்துதான்  கூற முடியும். அதனால் சென்னைக்கு புதிதாக நவீன விமான நிலையம் தேவை.

புதிய விமான நிலையம் விவகாரத்தில், நீண்ட நாட்களுக்கு பிறகு மத்திய, மாநில அரசு ஒற்றுமையுடன் முடிவு செய்த நடவடிக்கையை வேண்டாம் என்று கூறுவது விஜய்க்கு நல்லதல்ல. விமான நிலையம் பற்றி மாநில நிதி அமைச்சர் தெளிவாக விளக்கி கூறியுள்ளார் தமிழக வளர்ச்சிக்கு எதிராக அவர் பேசுகிறார்.” என்று அவர் கூறினார்.

தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றமே தீர்வு காணும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆளுநர் மனநிலையை புரிந்துகொள்ள முடியவில்லை என்றவர், முதல்வரின் சிவகங்கை பயணத்தை வரவேற்பதாக தெரிவித்தவர்,  முதல்வர் வருகை மாவட்டத்துக்கு நல்லது. அப்போதுதான் அதிகாரிகள் மக்கள் பணிகளில் வேகமாக செயல்படுவர் என்றார்.

மேலும்,  “காரைக்குடியில் வளர்தமிழ் நூலகத்தை திறந்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மாவட்டத்தில் கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைப்போம் என்றும் கூறினார்.