விருதுநகர்: விருதுநகரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய திமுக தலைவரும், முததலமைச்சருமான மு.க.ஸ்டாலின், 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், நாற்பதும் நமதே, நாடும் நமதே!”  என சூளுரைத்தார்.

திமுக மும்பெரும் விழா விருதுநகரில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பல ஆயிரம் திமுக தொண்டர்கள் திரளாக வந்து கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டவர்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வரவேற்றார். விழாவுக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்தார். விழாவில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விருது பெற்றவர்களுக்க விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதன்படி, அண்ணா விருது கோவை இரா.மோகனுக்கும்,  கருணாநிதி விருது பெற்ற திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருதுபெற்ற குன்னூர் சீனிவாசனுக்கும்,  பெரியார் விருது பெற்ற சம்பூர்ணம் சாமிநாதன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து விருது பெற்றவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து, 1968 முதல் 2018 வரை  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய 4,041 கடிதங்கள், 21,510 பக்கங்கள் அடங்கிய புத்தகமாக சீதை பதிப்பக உரிமையாளர் கவுரா ராஜசேகர் தொகுத்த இந்நூலை முதல்வர் வெளியிட, அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். மேலும் திராவிட மாடல் கொள்கை, கோட்பாடுகள் அடங்கிய நூலை அமைச்சர் துரைமுருகன் வெளியிட டிஆர்.பாலு பெற்றுக்கெண்டார்.

இந்த விழாவில்,  அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர்களில் சிறப்பாகக் கட்சிப் பணியாற்றிய தலா ஒருவர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணப்பரிசு மற்றும் சான்றிதழை ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசும்,  செப்.15 அண்ணா பிறந்த நாள் திருநாள். நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளும் நாள். இந்த ஆட்சிக்கு திராவிட மாடல் எனப் பெயர் சூட்டினேன். திராவிடம் என்ற சொல் இந்தியாவின் கவனத்தை ஈர்த்தது. திராவிடம் என்பது அரசியல் கொள்கையின் பெயராக இருக்கிறது. திராவிடம் என்றால் எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான். உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனப் பிரிப்பது ஆரிய மாடல், இதற்கு நேர் எதிரானது திராவிட மாடல்.

“கழக அடையாளமாய் கறுப்பு-சிவப்பு பார்டர் வைத்து வேஷ்டி தயாரித்தவர் அம்மையார் சம்பூர்ணம் சாமிநாதன். இவரைப் போல 10 சம்பூர்ணம் இருந்தால் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது என்று கலைஞரே பாராட்டி இருக்கிறார். அவருக்கு பெரியார் விருது அளிப்பது மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது.

சென்னை மாவட்டத்தில் தி.மு.கவை சிங்கம் போல வழிநடத்தியவர் டி.ஆர்.பாலு. தமிழகத்தின் தலைநகர் மட்டுமல்ல, இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் தி.மு.க குரலை ஓங்கி ஒலிப்பவர். அவருக்கு கலைஞர் விருது அளிப்பது சரியான தேர்வு என நினைக்கிறேன்.

நான் இளைஞரணி செயலாளராக இருந்தபோது, என்னை அழைத்துவந்து விருதுநகர் மாவட்டத்தில் கிராமம் கிராமமாக அழைத்துச்சென்று கழகக்கொடி ஏற்ற வைத்த பெருமை குன்னூர் சீனிவாசனுக்கு உண்டு. ரத்தம், வியர்வை, உழைப்பை கொடுத்து இந்த இயக்கத்தை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். உங்கள் தொண்டுக்கான பாராட்டு அல்ல இது. எங்களின் நன்றியை காட்டுவதற்கான விழா. நீங்கள் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

அதுமட்டுமல்லாது 4,041 கடிதங்கள்.. 21,500 பக்கங்கள் – கலைஞரின் கடிதங்கள் தொகுப்பு நூலில் உள்ளது. உலகத்தில் இத்தனை ஆயிரம் பக்கங்கள் எழுதிய ஒரே தலைவர் கலைஞராகத்தான் இருக்க முடியும். இந்த நேரத்தில் சண்முகநாதன் இல்லையே என்கிற ஏக்கம் என்னை ஆட்கொள்கிறது.

திராவிடம் என்பது ஒரு காலத்தின் இடத்தின் பெயராக, இனத்தின் பெயராக, மொழியின் பெயராக இருந்தது. இன்று அது ஒரு அரசியல் கொள்கையாக இருக்கிறது. “உயர்ந்தவர் தாழ்ந்தவர் – ஆரிய மாடல். எல்லாருக்கும் எல்லாம், அனைவரும் சமம் – இது திராவிட மாடல். மேலும் சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், இன உரிமை, மொழிப்பற்று, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் சேர்க்கையே திராவிட மாடல் ஆகும்.

இந்திய அளவிலான தனிநபர் வருமானத்தை விட, தமிழகத்தில் தனிநபர் வருமானம் அதிகம். கல்வி, கல்லூரி, மருத்துவம் என அனைத்திலும் தமிழகம் முன்னோடி. இதுதான் திராவிட மாடல் வளர்ச்சி. இதைத்தான் பெரியார் கனவு கண்டார். அண்ணா, கலைஞர் செய்துகாட்டினார்கள். அந்த கடமை இப்போது என் தோளில் சுமத்தப்பட்டுள்ளது.

தொண்டர்களால் ஆனவன் நான். லட்சோபலட்சம் தொண்டர்களின் உதிரத்தால் உருவானன் நான். ஆட்சியில் அமர்ந்திருப்பது தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல, உடன்பிறப்புகளால் ஆட்சியில் உட்காரவைக்கப்பட்டு இருக்கிறேன்.

ஒற்றைத்தன்மையையும், இந்தி திணிப்பையும் நம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜி.எஸ்.டி, நீட் தேர்வுகள் மூலம் நம் நிதி, கல்வி உரிமை பறிக்கப்படு கிறது. ஒன்றிய அரசின் சட்டங்கள் அனைத்தும் மக்கள் விரோத போக்கையே கொண்டுள்ளன.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பெரும்பாலான வளர்ச்சிக் குறியீடுகளில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. தமிழகத்தில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் என சுகாதாரத்தில் முன்னணியில் இருக்கிறோம். பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக இருக்கிறது. நூறு சிறந்த பல்கலைக்கழகங்களில் 21 தமிழகத்தில் உள்ளன.

மத்திய அரசின் இந்தி திணிப்பை ஏற்க முடியாது. மத்திய அரசின் ஜிஎஸ்டி மூலம் நிதி உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. நீட் மூலம் கல்வி உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சி நடத்தபார்க்கிறார்கள். இந்தியாவின் 3-வது மிகப் பெரும் கட்சியாக இருப்பது நமக்கு பெருமை.  அதை தக்க வைக்க வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 என்ற வெற்றியை அடைந்தாக வேண்டும்.

ஆளுநர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப்பார்க்கிறார்கள். இவற்றைத் தடுக்க நாடாளுமன்றத்தில் 40 உறுப்பினர்கள் இருந்தாக வேண்டும். அதற்கான களப்பணிகளை இப்போதே தொடர வேண்டும். அதற்கு முப்பெரும் விழா தொடக்கமாக அமையட்டும்.  நாற்பதும் நமதே, நாடும் நமதே !” எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இறுதியில் அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி கூறினார்.