சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படத்துக்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனப் பெயரிடப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பெயர் மாற்றப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

இதனிடையே திருச்செந்தூரில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக புதிய தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ‘வெந்து தணிந்தது காடு’ என்று பாரதியாரின் கவிதை வரிகளைப் பெயராக வைத்துள்ளது படக்குழு.

ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பாடலாசிரியராக தாமரை பணிபுரிந்து வந்தார். நடிகை ராதிகா, இப்படத்தில் சிம்புவின் தாயாராக நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மராத்தி நடிகையான இவர் ஏற்கனவே கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.