வேலூர்: வேலூர் நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையான,  ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக  கொள்ளையன் கைது செய்யப்பட்ட நிலையில், சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்த நகைகள் மீட்கப்பட்டது.

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் 15 கிலோ தங்கம், 500 கிராம் வைரம் கொள்ளை போனது. மர்ம நபர்கள் கடையின் பின்புறமாக உள்ள கழிவுநீர் கால்வாயை உடைத்து துளையிட்டு, நகைகடையினுள் சென்று நகைகடையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கேமராக்களிலும் ஸ்பிரே அடித்துவிட்டு, பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து கொண்டு மீண்டும் அதே வழியில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து  வேலூர் சரக காவல்துறை துணைதலைவர் பாபு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.  4 டி.எஸ்.பிகள் தலைமையில் எட்டு தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்து, அங்குள்ள சிசிடிவி காமிரா பதிவை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. அதில்,   வைர நகைகள் வைக்கப்பட்டிருந்த தளத்துக்குள் சிங்கத்தலை போன்ற முகமூடி அணிந்து நுழையும் ஒரு நபர் கண்காணிப்பு கேமரா மீது ஸ்பிரே அடிக்கும் காட்சி பதிவாகியிருந்தது.

அதன் பிறகு அந்த கண்காணிப்பு கேமராவில் எந்த ஒரு காட்சியும் பதிவாகவில்லை. அதேபோல, அங்குள்ள மேலும் சில கேமராக்கள் மீது முகமூடி அணிந்த கொள்ளையர்கள் ஸ்பிரே அடித்து அவற்றை செயலிழக்கச் செய்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இந்ந கொள்ளை தொடர்பாக வேலூர் குச்சிபாளையத்தைச் சேர்ந்த டீக்காராமன் மற்றும் கூட்டாளிகளான கண்ணன், பிரபு, வசந்த் உட்பட 10 பேரை பிடித்து போலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர். அதையடுத்து,  குச்சிபாளையத்தைச் சேர்ந்த டீக்காராமன் என்வரை கைது செய்து தீரவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அதில்,  கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், உருக்கப்பட்டு, வேலூரில் உள்ள சுடுகாடு ஒன்றில் புதைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. அந்த இடத்துக்கு சென்ற கொள்ளையனுடன் சென்ற காவல்துறையினர், அங்கு புதைத்து வைக்க நகைகளை தோண்டி எடுத்தனர். சுமார் 15 கிலோ அளவிலான உருக்கப்பட்ட நகைகள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.