வாரணாசி: பிரதமர் தொகுதியான வாரணாசியில் உள்ள  பழமையான காந்திய கல்வி நிறுவனமான சர்வ சேவா சங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களை இடிக்க,  மத்திய ரயில்வே வாரியம்  நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்,  அந்த பகுதியான நாகேபூர்  மக்களே பிரதமர் மோடி அரசாங்கத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர் என்று காங்கிரஸ் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில், 1948 ஆம் ஆண்டு ஆச்சார்யா வினோபா பாவே அவர்களால் மகாத்மா காந்தியின் கொள்கைகளையும் தத்துவத்தையும் பரப்புவதற்காக சர்வ சேவா சங்கம்  நிறுவப்பட்டது. காந்திய விழுமியங்களைப் பரப்புவதற்காகச் செயல்படும் சர்வ சேவா சங்கத்தின் கட்டிடத்தை  இடித்து அகற்ற  மாநில அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இது தொடர்பான வழக்கில், வாரணாசி மாவட்ட நீதிபதியும், கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து, சர்வ சேவா சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக,  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் சமர்ப்பிப்புகளை கவனத்தில் கொண்டு வந்தார். இதையடுத்து,, இந்த மனுவை திங்கட்கிழமை (இன்று)  விசாரிக்க ஒப்புக்கொண்டது.

இதற்கிடையில். சர்வ சேவா சங்கம் 1948 இல் ஆச்சார்யா வினோபா பாவே அவர்களால் மகாத்மா காந்தியின் சிந்தனைகள் மற்றும் தத்துவத்தை பரப்புவதற்காக நிறுவப்பட்டது, இப்போது கட்டிடத்தை உள்ளூர் நிர்வாகத்தால் இடிக்க முற்படுகிறது, அவசர விசாரணை  மற்றும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும்படி கோரினார்.

வாரணாசியில் உள்ள ‘பர்கானா தேஹாட்’ என்ற இடத்தில் உள்ள சர்வ சேவா சங்கம் வளாகத்திற்கான நிலம், “1960, 1961 மற்றும் 1970ல் மூன்று பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரங்கள்” மூலம் மத்திய அரசிடமிருந்து வாங்கப்பட்டதாக அந்த அமைப்பு கூறியது. அமைப்புக்கும் வடக்கு இரயில்வேக்கும் இடையிலான சர்ச்சையில் முடிவெடுக்க உயர்நீதிமன்றத்தால் அதிகாரம் பெற்ற மாவட்ட நீதிபதி, கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பினார். வருவாய் பதிவேடுகளின்படி அந்த நிலம் ரயில்வேக்கு சொந்தமானது என மாவட்ட ஆட்சியர் ஜூன் 26 அன்று தெரிவித்தார்.

இதையடுத்து, வாரணாசி மாவட்டத்தில் 12.90 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிப்பதற்காக வடக்கு ரயில்வே வழங்கிய இடிக்க நோட்டீஸை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அமைப்பு வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் கட்டிங்களை இடிக்கலாம் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளும், அந்த பகுதியான நாகேபூர் பகுதி  மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  கடந்த சனிக்கிழமை (8ந்தேதி) அந்த பகுதி மக்கள் ரயில்வே வாரியத்தின் அறிவிப்புக்கு எதிராக போராட்டத்தில் குதித்து, தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.  இந்த நாகேபூர் பகுதியானது  பிரதமர் மோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,  சர்வ சேவா சங்கம்  கட்டிடம் இடிப்பு தொடர்பாக டிவிட் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்,  காந்திய கல்வி நிறுவனமான சர்வ சேவா சங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களை இடிக்கப்போவதாக பிரதமர் மோடியின் அரசாங்கம் மிரட்டியபோது, பிரதமர் மோடியின் தத்தெடுக்கப்பட்ட கிராமமே அவருக்கு எதிராக நின்றது.

பிரிஜ் பூஷன் சிங்கைக் கைது செய்யக் கோரி சில வாரங்களுக்கு முன்பு நாகேபூர் மக்கள் பிரதமருக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது இது இரண்டாவது முறையாகும்.

ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் தேசத் தந்தையை கடுமையாக எதிர்த்தாலும், மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை உரிமை கொண்டாடும் வாய்ப்பை பிரதமர் இழக்க வில்லை. ஆனால் அதே சமயம் வினோபாபாவே, ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்றவர்களால் கட்டமைக்கப்பட்ட காந்திய நிறுவனங்களை அழித்துவிடுவது பொருத்தமாக பார்க்கிறார்.

இவ்வாறு தெரிவித்து உள்ளார்.