டெல்லி: வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு ரத்து மீதான வழக்கு அடுத்தவாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சியின்போத தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இதனை எதிர்த்து மற்ற சமூகத்தினர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, தமிழகஅரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்னும் விசாரணைக்கு எடுக்கப்படாத நிலையில்,  மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.