பொய் வாக்குறுதிகள், பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்ததற்கு தக்க பதிலை மக்கள் தற்போது திமுகவுக்கு அளித்துள்ளார்கள் என பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வானதி ஸ்ரீனிவாசன், “கடந்த மக்களவை தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிகப்பெரும் வெற்றியை பெற்றிருந்தன. அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமைத்தும், எங்களால் வெற்றிபெற இயலவில்லை. தமிழக மக்கள் அனைவரும் திமுக கூட்டணி பக்கம் நிற்பதாக தோற்றத்தை ஏற்படுத்த அப்போது முயற்சித்தனர். கடந்த தேர்தலில் பொய் வாக்குறுதிகள், பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்ததற்கான தக்க பதிலை மக்கள் தற்போது திமுகவுக்கு கொடுத்துள்ளனர்.

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றபோதே, திமுகவின் செல்வாக்கு இனி எடுபடாது என தெரிந்துவிட்டது. இந்த இடைத்தேர்தலில் அது நிரூபணமாகியுள்ளது. திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை தற்போது உணர்த்தியிருக்கிறார்கள். மக்களவை தேர்தலில் மக்களின் முடிவு தற்காலிகமானது என்று எண்ணும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

ஹரியானாவில் எங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காதது வருந்தக்கூடியதாகவும், அதிர்ச்சியாகவுமே இருக்கிறது. ஆனால் முற்றிலுமாக மக்கள் பாஜகவை புறந்தள்ளிவிடவில்லை. மகாராஷ்டிராவில் தொடர்ச்சியாக 2வது முறையாக நாங்கள் ஆட்சி செய்ய மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இதன் மூலம் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான அலை இருப்பதாக காங்கிரஸ் மேற்கொண்டு வந்த பொய் பிரச்சாரங்கள் உடைபட்டுள்ளது” என்று தெரிவித்தார்.