வைரமுத்து அப்படின்னாலே சர்ச்சைகள்தான்.. விமர்சனங்கள்தான். அடுத்தவங்க கவிதைகள ஆட்டையப்போட்டாரு, வாய்ப்புகளுக்காக அரசியல் பண்றாரு, திறமையான இளம் கவிஞர்களைக்கூட ஊக்கப்படுத்தாம தன்னையே முன்னிலை படுத்திக்கிறாரு, தன் பிறந்தநாளை கவிஞர் நாளாக்கிட்டாருன்னு ஏகப்பட்ட விமர்சனங்கள்.
அதுமட்டுமா.. திரைப்பாடலுக்காக இவரு தேசிய விருது பெறும்போதெல்லாம், “விருதை வாங்கிட்டாரு” அப்படின்னுதான் பலபேரு, சமூகவலைதளங்கள்ல கிண்டலடிக்கிறாங்க.
இப்பக்கூட பார்த்தீங்கன்னா… தன்னோட சுய லாபத்துக்காக, மோடிய புகழ்றாரு (“தனது தாய்மொழியில் கவிதை எழுதுவதால், பிரதமர் மோடியைப் பிடித்துவிட்டது”), அமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும் புகழ்றாரு (“நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல் நிமிர்ந்து நிற்கிறார்”) அப்படின்னு ஏகப்பட்ட விமர்சனங்கள்.
ஆனா இதையெல்லாம் வைரமுத்து கண்டுக்கிறதே இல்லே.
எப்படி இப்பிடி இருக்காருன்னு யோசிச்சிக்கிட்டிருந்தப்பத்தான், அவரு எழுதின கவிதை ஒன்னு கண்ணுல பட்டுது.
அட.. தன் மீதான விமர்சனங்களுக்கு எல்லாம் இதான் அவரோட பதிலான்னு ஆச்சரியமா இருந்துச்சு.
அதாவது தன்னை விமர்சிப்பங்களைப் பத்தி, வைரமுத்துவோட விமர்சன கவிதை!
நீங்களும் படிச்சுப்பாருங்க..
“உன்னைப் பார்த்து உலகம்
உரைக்கும்
தன்னம்பிக்கை தளரவிடாதே !
இரட்டைப் பேச்சு பேசும்
உலகம்
மிரட்டும் தம்பி மிரண்டுவிடாதே !
ஒவ்வொரு வாயிலும்
ஒற்றை நாக்கு
உலகின் வாயில் இரட்டை நாக்கு !
எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்
உனக்கு சொல்கிறேன்
உள்ளத்தில் எழுது !
இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்
இலக்கியம் இல்லை
லேகியம் என்றது !
திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்
பரிமேலழகரை
வரச்சொல் என்றது !
குறுந்தொகை கம்பன் கொட்டி முழக்கினேன்
குண்டுச் சட்டியில்
குதிரை என்றது !
எலியட், நெருடா எல்லாம் சொன்னேன்
திறமை எல்லாம்
திருடியதென்றது !
எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்
வடுக பட்டி
வழியுது என்றது !
அழகாய் நானும் ஆடைகள் கொண்டேன்
கழுதைக் கெதற்கு
கண்மை என்றது !
மேடையில் கால்மேல் காலிட்டமர்ந்தேன்
படித்த திமிர்தான்
பணிவில்லை என்றது !
மூத்தோர் வந்ததும் முதலில் எழுந்தேன்
கவிஞன் அல்ல
காக்கா என்றது !
உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்
காதில் பூ வைக்கிறான்
கவனம் என்றது !
விரல்நகத்தளவு விமர்சனம் செய்தேன்
அரிவாள் எடுக்கிறான்
ஆபத்து என்றது !
மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் விழுந்தேன்
புத்தி கொழுத்தவன்
புதைந்தான் என்றது !
மூச்சுப் பிடித்து முட்டி முழைத்தேன்
தந்திரக்காரன்
தள்ளிநில் என்றது !
பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்
பயந்துவிட்டான்
பாவம் என்றது !
மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்
விளங்கிவிட்டதா ?
மிருகம் என்றது !
பணத்தில் பொருளில் பற்றற்று இருந்தேன்
வறுமையின் விந்துவில்
பிறந்தவன் என்றது !
என்னை தேய்த்து மண்டபம் கட்டினேன்
புலவன் இல்லை
பூர்ஷ்வா என்றது !
சொந்த ஊரிலே துளிநிலம் இல்லை
இவனா ?
மண்ணின் மைந்தன் என்றது !
தென்னை மரங்கள் தேடி வாங்கினேன்
பண்ணையார் ஆனான்
பாமரன் என்றது !
கயவர் கேட்டார் காசு மறுத்தேன்
கறக்க முடியா
கஞ்சன் என்றது !
உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன்
உதறித்திறியும்
ஊதாரி என்றது !
மங்கயரிடையே மௌனம் காத்தேன்
கவிஞன் என்ற
கர்வம் என்றது !
பெண்கள் சிலருடன் பேசத்தொடங்கினேன்
கண்களை கவனி
காமம் என்றது !
திசைகள்தோறும் தேதி கொடுத்தேன்
ஐயோ புகழுக்கு
அலைகிறான் என்றது !
நேரக்குறைவு நிறுத்திக்கொண்டேன்
கணக்குப் பார்க்கிறான்
கவிஞன் என்றது !
அப்படி இருந்தால் அதுவும் தப்பு ,
இப்படி இருந்தால்
இதுவும் தப்பு .
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்
தன் நிழல் பார்த்து
தானே குரைக்கும் .
உலகின் வாயைத் தைத்திடு அல்லது
இரண்டு செவிகளை
இறுக்கி மூடிடு !
உலகின் வாயைத் தைப்பது கடினம்
உந்தன் செவிகளை
மூடுதல் சுலபம்”
– எப்புடி இருக்கு வைரமுத்தோட விளக்கம்?