தேனி: மதுரை சித்திரை திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினமே வைகை அணையில் இருந்து வைகை ஆற்றில்  தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நடைபெறும். இதற்காக வைகை அணையில் போதுமான நீர் இருப்பு இருந்தால் தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இதையொட்டி,   வைகை அணையில் இருந்து 19-ந்தேதி மாலை 6மணிக்கு தண்ணீர் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. ஆரம்பத்தில்,  திறக்கப்படும் தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் கூடுதலாக திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் வேகமாக ஆற்றில் செல்லும் வகையில் இரவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 19-ந்தேதி மாலை 6 மணி முதல் 23-ந்தேதி காலை 6 மணி வரை மொத்தமாக 26 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

வைகை அணையானது,  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது. இந்த அணையின் உயரம்  71 அடி. இந்த அணையில் சேமிக்கப்படும்,  தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. அதன் பிறகு மழை படிப்படியாக குறைந்ததாலும் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.  தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியாக உள்ளது.