சென்னை: மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் குறித்து  அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வதுஅலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியதால், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதியில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால், தொற்றின் தாக்கம் அதிகம் இருப்பதால் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் என்பவர்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது , இது தொடர்பாக, ஏற்கனவே உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள்,  மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடுவதற்கான திட்டம் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.