டேராடூன்

முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்போருக்கு உத்தராகாண்ட் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

முப்படை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தனர்.   இவர் மரணம் குறித்து சமூக வலைத் தளங்களில் சிலர் ஆட்சேபமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.  இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  அவர்களில் உத்தராகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் ஒருவர் ஆவார்.

புஷ்கர் சிங் தாமி, “சமீபத்தில் மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத், நமது உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் நமது மாநிலத்துடன்  நெருங்கிய தொடர்பில் இருந்தார்.  மேலும் உத்தராகாண்ட் மாநில மேம்பாட்டுக்காக எப்போதும் சிந்தனை செய்த அவர் நம் நினைவில் என்றென்றும் நிலைத்திருப்பார்.

நாம் அவருடைய திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முயல்வோம். ராவத் ஒரு துணிச்சலான போர் வீரர் மற்றும் தேசத்துக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஆவார்.  ஒரு சிலர் முப்படைத் தளபதி பிபின் ராவத் உட்பட, மறைந்த பாதுகாப்புப் படை வீரர்கள் குறித்து சமூக ஊடக தளங்களில் ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

நாம் நமது ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவது மிகவும் முக்கியமானது.  எனவே சமூக வலைத்தளங்களிலோ அல்லது வேறு எந்த வகையிலோ மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத், பாதுகாப்புப் படை வீரர்கள் குறித்து ஏதேனும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை யாராவது தெரிவித்தால், அவர்கள் மீது உத்தராகாண்ட் அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்.” என எச்சரித்துள்ளார்.