ஃப்ளாரிடா: செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்த திட்டமிடும் நாடுகள், அத்தகைய நடவடிக்கைகளால், விண்வெளியில் குப்பைகள் சேர்ந்து பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை நினைவில் வைக்கவேண்டுமென எச்சரித்துள்ளார் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் (பொறுப்பு) பேட்ரிக் ஷனஹன்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “இந்தியாவின் மிஷன் சக்தி திட்டத்தின் விளைவுகளை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். நாம் அனைவருமே இந்தப் பால்வெளியில் வாழ்கிறோம். எனவே, நாம் வாழும் வெளியானது குப்பையாகக்கூடாது.

விண்வெளி என்பது நாம் பலவிதமான செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய இடம். அங்கே மக்களுக்கு தேவையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்” என்றார்.

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை திட்டங்களால், உருவாகும் குப்பைகளால், விண்வெளியில் வேறுபல எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். இதனால், விண்வெளியில் செயல்படும் வேறுபல செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், நீண்டகால பாதிப்புகளும் உண்டாகும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

– மதுரை மாயாண்டி