லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில்  போட்டியிடும் 125 வேட்பாளர்கள் கொண்ட  முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டார். இதில், பெண்கள், இளைஞர்களுக்கு தலா 40% இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.

403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம் 2022ம் ஆண்டு  மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அங்கு, பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்  அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், சிவசேனா என தேசிய மற்றும் மாநில கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. தேர்தல் களம் அங்கு சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.  உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி  125 பேர் கொண்ட  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் 50 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 125 வேட்பாளர்களில் 40 சதவீதம் பேர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வேட்பாளர்களில் 40 சதவீதம் பேர் இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்கிய வேட்பாளராக,  2017-ம் ஆண்டு பாஜக எம்எல்ஏ ஒருவரால் வன்கொடுமை செய்யப்பட்ட உன்னாவ் சிறுமியின் தாய் ஆஷா சிங்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இவர் சொந்த இடமான  உன்னாவ் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு முக்கிய வேட்பாளராக  கோண்ட் பழங்குடியினரின் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த ராம்ராஜ் கோண்ட் என்பவரும் நிறுத்தப்பட்டு உள்ளார்.  உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்ட  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் முக்கிய வேட்பாளராக ஷாஜஹான்பூரில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க முயன்றபோது காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட சுகாதாரத்துறை ஊழியர் பூனம் பாண்டே அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதுபோல சிஏஎ சட்ட எதிர்ப்பு  போராட்டத்தால் சிறையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சதாப் ஜாபர் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, தற்போது வெளியிடப்பட்டுள்ளது முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் என்றும்,  அறிவிக்கப்பட்டுள்ள 125 வேட்பாளர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் 40 சதவீதம் பேர் இளைஞர்கள். மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பாலின சமத்துவத்தில் கவனம் செலுத்தி பெண்களுக்கு முக்கியவத்துவம் கொடுத்துள்ளோம், இந்த வரலாற்று முயற்சியின் மூலம், மாநிலத்தில் ஒரு புதிய அரசியலை கொண்டு வருவோம் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

சிவசேனா தனித்து போட்டி: பலமுனை போட்டிகளுடன் களம் காணும் உத்தரபிரதேசம்

உ.பி.யில் ஆட்டம் காணும் பாஜக…! யோகி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அடுத்தடுத்து 7 பேர் ஓட்டம்…