லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறிய வந்த  சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தற்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உ.பி. மாநிலம்  கர்ஹால்  தொகுதியில் போட்டியிடுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கின்றன. பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது, மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அங்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக முயற்சித்து வருகிறது. ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி  போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. இதற்கிடையில், பாஜகவில் இருந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என 7 பேரை சமாஜ்வாதி கட்சி, தனது கட்சிக்கு இணைத்துள்ளது. இதனால், அங்கு  பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் நேரடியாக போட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது

தற்போது அகிலேஷ் யாதவ் ஆசம்கர் தொகுதி மக்களவை எம்.பி.யாக உள்ளார். இதனால், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறி வந்தார். ஆனால், பாஜகவில் பலர் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்த நிலையில், அகிலேஷ் யாதவ் போட்டியிடவும் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில்,  அகிலேஷ் யாதவ் தேர்தலில் போட்டியிடுவார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த  சமாஜ்வாதி கட்சி பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ்,  சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக கருதப்படும் மெயின்புரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கர்ஹால் சட்டப்பேரவைத் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.