சென்னை: தென்மாவட்ட ரயில்கள் உள்பட 192 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள்மீண்டும் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பயணிகளில் ரயிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. பின்னர் தொற்று பரவல் குறைந்து வந்ததால், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து, ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், அனைத்து ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் நீக்கப்பட்டன.

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு 5ஆயிரத்துக்கும் கீழே வந்துள்ளதால், ரயில் சேவைகளை முழுமையாக இயக்க இந்தியன் ரயில்வே முடிவெடுத்துள்ளது. அதன்படி விரைவு ரயில்களிலும் முன்பதிவில்லா பெட்டிகள் உள்பட உணவு தயாரிப்பு என அனைத்து சேவைகளும் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்,  192 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் மீண்டும் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முதற்கட்டமாக சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்டத்தில் இருந்து புறப்படும் யஷ்வந்த்புர் மற்றும் ஹூப்ளி விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி வரும் 10-ம் தேதி முதல் இயக்கப்படும். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில், முத்துநகர், உழவன் விரைவு ரயில்களில் ஏப்ரல் 1-ம் முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும்.

ஏப்ரல் 16-ம் தேதி முதல், நெல்லை, குமரி, பாண்டியன், பொதிகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவின்றி பயணிக்கலாம். இதன் மூலம் திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 ரயில்வே கோட்டத்திலும் மொத்தமாக 192 விரைவு ரயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.